செவ்வாய், 27 டிசம்பர், 2016

எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

எது நடந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.

ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார்.
பெருக்கிச் சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக் குறைவின்றி சிறப்பாகச் செய்து வந்தார். கோவில், விட்டால் வீடு என்றுதான் வாழ்ந்து வந்தார். இதைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும்  ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். ‘இறைவன்
இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே…
அவனுக்கு சோர்வாக இருக்காதா?’ என்று எண்ணிய
அவர் ஒரு நாள், இறைவனிடம் “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக
நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ
சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டார்.இறைவன், “எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக நாளை ஒருநாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய
நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்க
வேண்டும். வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன்
ஆசி வழங்கினால் போதுமானது. யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ கடவுள் சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என்
மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூறினார். அதற்கு அந்தப் பணியாளும் சம்மதித்தார்.

அடுத்த நாள், இறைவனைப்
போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோவில் கருவறையில் நின்றார். இறைவனோ இவரைப் போல தோற்றத்தை ஏற்றுக்
கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன்
வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும்
என்று இறைவனிடம் வேண்டி, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினான்.
அவன் திரும்பிச் செல்லும் போது, தவறுதலாகத்
தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றான். இதைக்
கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும்
பணியாளர் பார்த்தார். ஆனால், இறைவன்
நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார்.
அப்படியே அசையாது நின்றார். சிறிது நேரம்
கழித்து ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம்
உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது.
அவன், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர
முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடையப்
பிரச்சனைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன்.
நீயே எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்” என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன்
வேண்டினான். சில வினாடிகள் கழித்துக் கண்களைத் திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவற விட்ட பணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம்
மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட
இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு
செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி, அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொள்கிறான். இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருந்த, அந்தப் பணியாளரால்
தற்போதும் எதுவும் சொல்ல முடியவில்லை.
அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார்.சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன்
செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம்
பிரார்த்தனை செய்தான்.அந்த நேரம் பார்த்து, பணப் பையைத் தொலைத்த செல்வந்தன், காவலர்களுடன் திரும்பக் கோவிலுக்கு வந்தான். அங்கு, கப்பல்
வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என்பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப் பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற,
காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச்
செல்கிறார்கள்.“இறைவா என்
பணத்தை அபகரித்தவரை அடையாளம்
காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தன்
இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார். சிலையாக நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி,
“கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க
முடியாது…” என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த
உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய்,
உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர்.

இரவு வருகிறது.
கோவில் வாசல் மூடப்படுகிறது. இறைவன் வருகிறார். மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த பணியாளரிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார்.
“மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன்.
ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….” என்று காலை கோவிலில் நடந்ததைக் கூறினார். இறைவனோ
இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார். இறைவன் அதிருப்தியைப் பார்த்த பணியாளர் பதற்றமானான். இறை
வன், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ
ஏன் நடந்து கொள்ளவில்லை…? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என்
நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என்
மீது நம்பிக்கை இல்லை.
இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான்
பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளைத்
தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால்
அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும் என்
மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க
வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச்
சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும்
இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன்
திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச்
சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன்
கப்பலும் காணாமல் போயிருப்பார்கள்.
அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத்
தற்காலிகமாகத்திருட்டுப் பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த
ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக
எண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்த
செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்.
அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும்.
இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம் செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும்
பாழ்படுத்திவிட்டாய்.” என்றான். பணியாளர், இறைவனின்
கால்களில் விழுந்து தன்
தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். “இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும்
மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் நலம் வேண்டியே நான் ஒவ்வொரு பொழுதையும் கழிக்கிறேன்.
அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன்.
நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றான்...

ஒரு நாளும் இறைவன் தப்புக்கணக்கு போட்டதில்லை.



நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம்.

நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம்.

#சத்திரபதி_சிவாஜி_மகராஜ்_வாழ்க்கை_சம்பவங்கள்_

சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.

அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.

அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.

சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.

சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.

தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.

இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர்.
1) கெட்டவர்கள்
2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.

எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.

நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம். திருவருள் துணை புரியட்டும்.

நம் இளைய தலைமுறையினர் நம் வீரர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும், அதற்கான சிறு முயற்சி...

திங்கள், 26 டிசம்பர், 2016

உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்.

ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்.

கடையிலிருந்து ஒரு பேனாக் கத்தியை எடுத்து விரித்தார். பிச்சைக்காரன் பயந்து போனான்.

எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே? எனக் கேட்க, நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி! என்றான்  பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? எனக்கேட்க..

எங்க அப்பா, தாத்தா,
தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தா....
ன்னு பல தலைமுறைக்கு முன்னாடில இருந்தே!

யாரோ ஒரு மகான்- கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம்..

அடப்பாவி!

பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?

எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

கடைக்காரர் அமைதியாக பேனாக்கத்தியால்...

அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.

சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான்.

நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல...

அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!

என பரிதாபமாக கேட்க...

கடைக்காரர் சிரிக்கிறார்.

மேலும் சுரண்டுவதை நிறுத்தவே இல்லை.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.

ராசியான ஓடு சாமி!

மகான் கொடுத்த ஓடு ஐயா...

தர்மப்பிரபு!

கடைக்காரர் ஓட்டைச்

சுரண்டிக்கொண்டே இருந்தார்.

சுரண்டச் சுரண்ட...

அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர்
வேதனையுடன் சொன்னார்!

அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,

இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க

கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?

என சொல்கிறார்.

இதே போலத்தான்...

நாமும் நமக்குள் இருக்கும்...

ஆழ்மனத்தின்...

தன்னம்பிக்கை- யின்
மனோசக்தியின் மகத்துவத்தை, மகாசக்தியை....,

உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்போது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

உங்கள் ஆழ்மனத்திற்கு என்ன ஆணை கொடுப்பதென்று..!

(படித்ததில் பிடித்தது)

வெள்ளி, 23 டிசம்பர், 2016

நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது.

நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.

அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும்
ஒரு 🎈🎈
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.

எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில்
எழுதி முடித்தவுடன் ,

அதை இன்னொரு
அறையில் நிரப்ப
சொன்னார்.

இப்பொழுது
அந்த பேச்சாளர்,
உங்கள் பெயர் எழுதிய
பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.

உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து
அந்த
அறைக்குள் ஓடிச் சென்று
ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து
தேடினர் .

ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே
விழுந்து

தங்கள் பெயருக்குரிய 🎈பலூன்
கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.
5 நிமிடம் கடந்த போதிலும்
ஒருவராலும்
தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,

’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும்
எடுங்கள்,
அந்த பலூனில் 🎈யார்
பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள்’
என்றார்.

அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்
எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும்
கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’இது தான்
வாழ்க்கை.

எல்லோரும்
மகிழ்ச்சியை தேடுகிறோம்,

ஆனால்
அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும்
என்று நினைப்பது இல்லை’.

’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.

அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.

இந்த நாள் அனைவருக்கும் சந்தோஷமாய்
மலரட்டும் ..!!

வியாழன், 24 நவம்பர், 2016

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்*.... 

புகை நமக்கு பகை ...


மனதை கலங்க வைத்த கதை

மகேஷ் அங்க பாரேன் முழு நிலா எவ்வளவு அழகா இருக்கு என்று மகேஷ் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தவாறே கூறினாள் மகா...

"என் இந்த நிலாவ விடவா அந்த நிலா அழகு "என்று சொல்லிக்கொண்டே மகாவை கட்டியணைத்தான் மகேஷ்!

" விடு மகேஷ்... வயித்துல இருக்க உன் பிள்ளை உதைக்குறான் "

" ஏய் லூசு அவன் உதைக்கல டி... என் அப்பனுக்கு அம்மா மேல எவ்ளோ லவ் பாருனு சந்தோசத்துல துள்ளி குதிக்குறான் "என்று சொல்லிக்கொண்டே மகாவை மேலும் இருக்கமாய் அணைத்துக் கொண்டான் மகேஷ்!

மகேசும் மகாவும் காதலிச்சு பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க...
அவங்க காதலோட சாட்சியா இப்போ மகா வயித்துல ஆறு மாத கரு...

மகேஷ் ஒரு பன்னாட்டு நிறுவனத்துல உயர் பதவியில இருக்கின்றான்!  கை நிறைய சம்பளம்!

****************************************************************/********************

மறுநாள் நீண்ட நேரமாகியும் மகேஷ் படுக்கையை விட்டு எழுந்திருக்காததால் மகா எழுப்பினால்...

"மகேஷ் எழுந்திருங்க டைம் ஆச்சி ஆபிஸ்க்கு போகலையா "

மகேஷ் எழுந்து...

" மகா என்னனு தெரியல தொண்டை ரொம்ப வலியாயிருக்கு... பேசக் கூட கஷ்டமா இருக்கு மகா... "திக்கி திணறி வலியோடு சொல்லி முடித்தான் மகேஷ்!

" அய்யோ என்னாச்சி மகேஷ்... கிளம்புங்க நாம டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம் "

" நான் ஜெய்க்கு போன் பண்ணி வர சொல்லி அவன்கூட போய்ட்டு வர்றேன் மகா... நீ எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு "

" சரி மகேஷ் "

************, ******************************************************

" சொல்லுங்க மகேஷ் எத்தனை நாளா வலியிருக்கு "

" நைட்ல இருந்துதான் டாக்டர் "

" ஓகே... நான் ரெண்டு நாளைக்கு மெடிசின் தர்றேன் சாப்பிடுங்க... சரியாகலனா ரெண்டு நாள் கழிச்சி வாங்க "

" ஓகே டாக்டர் "
மகேஷ் டாக்டர் எழுதிக் கொடுத்த மருத்துவ சீட்டை பெற்றுக்கொண்டு வெளியேறினான்!

*****************, ******************************************************

இரண்டு நாட்களாகியும் வலி குறையாததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான் மகேஷ்!

" டாக்டர் இன்னும் வலி குறையல டாக்டர் "

" மகேஷ் உங்களுக்கு புகை பிடிக்குற பழக்கம் இருக்கா.... ஐ மீன் ஸ்மோக்கிங் ஹேபிட் "

" ஏ... ஏன் கேக்குறிங்க டாக்டர் "
மேசை பயம் தொற்றிக்கொண்டது!

" பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக கேக்குறேன் "

" ம்ம்ம்... இருக்கு டாக்டர் "

" ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க "

" மினிமம் இரண்டு பாக்கெட் "

" ஓகே பைன்.... பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக நாம ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோம்... "

" என்ன டெஸ்ட் டாக்டர் "

" கேன்சர் டெஸ்ட்... இது ஒரு சந்தேகத்துக்காகதான்... நீங்க லேப்ல சேம்பல் கொடுத்துட்டு போங்க... ரிசல்ட் வர ஏழு நாளாகும்... நீங்க நெக்ஸ்ட் வீக் வாங்க "

" டாக்டர் எனக்கு கேன்சர்னு சொல்றீங்களா??? "

" ஹலோ மகேஷ் இது ஜஸ்ட் ஒரு கிளாரிபிகேஷன் அவ்வளவுதான்... நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க... "

************************************************************************************

இந்த ஏழு நாட்கள் மகேஷிற்கு நரகமாய் நகர்ந்தது...

மகா அவனை நெருங்கி வந்தாலும் இவன் விலகி செல்ல நிறைய மனக்கசப்புகள் இருவருக்குள்ளும்!

மகேஷ் மனதில் பயத்தை சுமந்து கொண்டு மருத்துவமனை சென்றான்!

"வாங்க மகேஷ்... "

" டாக்டர் ரிசல்ட் வந்துடுச்சா "

" ம்ம்ம்.... மகேஷ் உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா??? "

டாக்டர் கேட்ட கேள்வி மகேசின் பயத்தை மேலும் கூட்டியது!

" ம்ம்ம்...."என்று தலையாட்டினான் மகேஷ்!

"சாரி மகேஷ் உங்களுக்கு கேன்சர்னு ரிப்போர்ட் வந்திருக்கு "

மகேசும் மனதிற்குள் அவ்வார்த்தை பேரிடியாய் இறங்கியது!

" ஐய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க.... டாக்டர் நான் இப்போதான் வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சிருக்கேன் இதுக்குள்ள அது முடிஞ்சி போச்சினு சொன்னா எப்படி டாக்டர்.... என் குழந்தை... என் குழந்தை முகத்த கூட நான் இன்னும் பார்க்கல... அய்யோ மகாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.... டாக்டர் இது சரி பண்ண முடியாதா?  ஏதாச்சும் வழி இருக்கா டாக்டர்... நான் வாழனும் டாக்டர்... என் மகா கூட நான் வாழணும் "என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான் மகேஷ்!

" மகேஷ் நோய் வரதுக்கு முன்னாடி நாம இதெல்லாம் யோசிக்கறதில்லை... கேன்சரை குணப்படுத்த முடியாது... மரணத்தை வேணும்னா கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்...அதுவும் வலியோட"

" ஐய்யோ டாக்டர் நான் வாழனும் டாக்டர் "

" மகேஷ் உங்க வாழ்க்கை யாரால போச்சினு இப்போ தெரியுதா "

" என் அற்ப சுகத்துக்காக சிகரெட் பிடிச்சி என் வாழ்க்கையோட சேர்த்து மகா வாழ்க்கையையும் அழிச்சது சிகரெட்தான் டாக்டர் "

" சிகரெட் பிடிக்காதீங்கனு எத்தனையோ வழிமுறைல நம்ம அரசாங்கம் சொல்லுது எவன் கேக்குறிங்க.... நோய் வந்ததுக்கப்புறம் தெரிஞ்சிருந்தா நான் தொட்டிருக்க மாட்டேன்னு அழறீங்க...

இப்போ நான் சொல்றேன் நீங்க இந்த பழக்கத்த விட்டுட்டு போய் குடும்பத்தோட சந்தோசமா வாழுங்க..."

"டாக்டர் என்ன சொல்றீங்க "

" யெஸ் உங்களுக்கு கேன்சர் இல்ல... ட்ரோட் இன்பெக்சன் ஆகியிருக்கு... இது தொடர்ந்தா கேன்சர் வர வாய்ப்பிருக்கு... இதை நான் முதலே சொல்லியிருந்தா நீங்க ஆஸ்பிடட்டல்ல இருந்து வெளிய போனதும் இந்த ஏழுநாள் டென்சனை போக்க சிகரெட்ட பத்த வெச்சிருப்பீங்க... இப்போ சொல்லுங்க சிகரெட் பிடிப்பீங்களா? "

" அய்யோ டாக்டர் இனிமே மனசால கூட அந்த சனியனை நினைக்க மாட்டேன்... இது கடவுள் எனக்கு கொடுத்த இன்னொரு வாழ்க்கை "
என்று கண்களில் கண்ணீரோடு டாக்டரை கையெடுத்து கும்பிட்டான் மகேஷ்!

*****************, ************** *****************************//****
உதட்டோடு உறவாடி

உயிரை பறிக்கும்...

ஆறாவது விரல்

சிகரெட்!

வெளியேறுவது புகை மட்டுமல்ல உங்கள் புன்னகையும்தான்!