திங்கள், 31 அக்டோபர், 2016

அன்பே கடவுள்.

அன்பே கடவுள்.

ஒரு துறவி கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக்கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும்போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம்போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.....பின்னர்..

சீடர்களில் ஒருவர்:= கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்!

அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி:= ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்?

அவர்கள் உன்னருகில்தானே நிற்கிறார்கள்!

நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்...... ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

கடைசியாக துறவி பதில் கூறுகிறார்..... எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது!

எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம்போட வேண்டியிருக்கும்!

அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை!

அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்!

மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்.....இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது!

அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும்போது வார்த்தையே தேவைப்படாது!

அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும்போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டுவிடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார்........ அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும்போது,

""உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!

மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!""

அப்படி செய்யாமல் போனால், ""ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்றுசேரும் பாதையே அடைக்கப்பட்டுவிடும் நிலை வந்துவிடும்........!!!

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.

கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.

குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.

புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர்,“என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக் கொண்டிருந்தேன்”.

சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி,
புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி,பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.

தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி, “நான் யார் தெரியுமா!” என்றார்.

சிறுவன் சொன்னான்.“தெரியுமே! நீங்கள்தான் கடவுள்!!”

கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.

வெள்ளி, 28 அக்டோபர், 2016

தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்

தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்.

இரக்க குண பெண்மணி ஒருத்தி 
தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்...

அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகு கிழவன் அதை எடுத்துக் கொண்டு,
ஏதோ முனகிக் கொண்டே போவான்.
இது அன்றாட வழக்கமாயிற்று!.

ஒரு நாள் மதில் அருகிலேயே நின்று,
கிழவன் என்ன முனகுகிறான் என்று
செவிமடுத்து கேட்டாள்.

அவன் முனகியது, இதுதான்:
" நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்;
நீ செஞ்ச புண்ணியம் ஒன்னிடமே திரும்பும்."

தினந்தோறும் இதையே சொல்லிக் கொண்டு போனான்.
'தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துட்டு போறான்;
"நீ மவராசி நல்லா இருக்கணும் " ன்னு
கையெடுத்துக் கும்பிட்டு கை, கால்ல விழல்லைனாலும்,
"இட்லி நல்லா இருக்கு "ன்னு பாராட்டல்லனாலும்;
" ரொம்ப நன்றி தாயே" ன்னு சொல்லக் கூடவாத் தோணல ;
ஏதோ,... "செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்;
செஞ்ச புண்ணியம் ஓனக்கே திரும்பும்" ன்னு
தினம் தினம் உளறிட்டுப் போறானே'
என்று எண்ணி எண்ணி புலம்பினாள் அவள்.

'இவன் என்ன பித்தனா, இல்ல, சித்தனா, பரதேசி பய' என்று திட்டினாள்.
'நன்றி கெட்ட கூனனை' நினைத்து
மன உளைச்சலுக்கு ஆளானாள்!
நாளடைவில் அவளது கோபம் தலைக்கேறி,
கொலை வெறியாக மாறியது!
ஒருநாள் இட்லி மேல் விஷம் கலந்து செத்து தொலையட்டும் என
மதில் மேல் வைக்கப் போனாள்....

மனம் ஏனோ கலங்கியது;
கை நடுங்கியது. அவன் அப்படி இருந்தாலும், சே...நாம் ஏன் இப்படியாகணும்னு
அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்து விட்டு
வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்து விட்டு மனம் அமைதியானாள்.

வழக்கம் போல் கூனக் கிழவன் வந்தான்;
இட்லியை எடுத்துக் கொண்டு,
வழக்கம்போல,
"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும் ;
நீ செஞ்ச புண்ணியம் ஓன்னிடமே திரும்பும்! "
என்று சொல்லிக் கொண்டே சென்றான்!
அவனை அப்படியே அறையலாம் போலிருந்தது, அந்த பெண்மணிக்கு!.

அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள்;
வாசலில் வாலிபன் ஒருவன்
கசங்கிய உடையோடு தள்ளாடிய படி நின்றிருந்தான்.

வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டு சென்ற அவளது ஒரே மகன்தான் அவன்!.

"அம்மா, வீட்டுக்கு திரும்பி வரும் போது
என் பர்ஸ் காணாம போச்சு; கையில காசு இல்ல;
தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல;
மணிக் கணக்கில நடந்து வந்துட்டே இருந்தேன்;
நல்ல வெய்யில்; அகோரப் பசி வேறு;
மயங்கி விழுந்துட்டேன்;
கண் முழிச்சு பாத்தப்போ...
யாரோ ஒரு கூனமுதுகு கிழவன்
என்னை தூக்கி உட்கார வச்சு
ரெண்டு இட்லி கொடுத்து சாப்பிடச் சொன்னான்.

இட்லி சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது!
இதைக் கேட்டதும்,பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்!

'விஷம் கலந்த இட்லியை கூனனுக்கு கொடுத்திருந்தால்...
அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா!'
என்று நினைத்து தாய் உள்ளம் பதைபதைத்தது; கண்கள் பனித்தன..

"நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும்
நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் "
...கூனன் முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது!
உன்மைதான் ...

எல்லாருக்கும் எல்லாம் புரிவதில்லை...

புரியும் வேளையில் வாழ யாரும் இருப்பதும் இல்லை....

*செய்த தர்மம் என்றும் நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும்*

*ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்*.

*வாழ்வில் தப்ப ஒரே வழி முகம் கோணாத தர்மமே*.

வியாழன், 27 அக்டோபர், 2016

வாழையும் தென்னையும்...

வாழையும் தென்னையும்...

ஓரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று  நடப்பட்டது.  ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ  இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
தென்னங்கன்று சொன்னது,
" ஒரு வருஷம் ".
"ஒரு வருஷம்னு சொல்றே ,  ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு  ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல  சிரித்தது. 
தென்னங்கன்றோ அதைக்  காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.

           ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக  இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.
வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது.  தென்னங்கன்றோ எப்போதும் போல  சலனமில்லாமல் புன்னகைத்தது.

         வாழைக்கன்றை நட்டு  ஒரு வருடம்  ஆவதற்குள் தென்னங்கன்றைவிட  இருமடங்கு  உயரமாகி விட்டது. தினமும் தென்னங்கற்றைப் பார்த்து கேலி செய்து சிரிப்பது மட்டும் குறையவேயில்லை
"கடவுளுக்கு  உன்னை மட்டும் பிடிக்காதோ ? ஒரு லெவலுக்கு மேல வளரவிடாம தட்டியே வச்சிருக்காரே!
நீ  இருக்குற மண்ணில் தான்  நானும் இருக்கேன். உனக்கு கிடைக்கிற தண்ணிதான்  எனக்கும் கிடைக்குது.  ஆனா பாரு , நான் மட்டும்  எப்படி வளந்துட்டேன். உனக்கு விதிச்சது அவ்வளவுதான் போல " என்று வார்த்தைகளாலேயே குத்திக் காயப்படுத்தியது.  தென்னங்கன்றிடம் புன்னகை தவிர வேறெந்த பதிலும் வரவில்லை.
         இன்னும் சிறிது காலம் சென்றது.  அதிலிருந்து  அழகான குலை வெளிப்பட்டது.  அது பூவும் ,  காய்களுமாக அழகாக மாறியது. அதனுடைய பெருமை இன்னும்  அதிகமானது.  இரவும், பகலும் தென்னங்கன்றைக் கேலி செய்து சிரித்தபடியே பொழுதைக்  கழித்தது.
        நல்ல  உயரம் .  பிளவுபடாத அழகிய இலைகள்,  கம்பீரமான குலை .  வாழை மரத்தின் பெருமைக்கு அளவே இல்லாமல் போனது.  இப்போது காய்கள் முற்றின .

        ஒரு மனிதன்  தோட்டத்துக்கு வந்தான்.  வாழை மரத்தை சந்தோஷமாய் சுற்றி வந்தான்.  வாழைக்காய்களைத் தட்டிப்  பார்த்தான்.  தென்னை மரத்தைத்  திரும்பிக்கூடப் பார்க்கவில்லை . இதை விட வேறென்ன  பெருமை வேண்டும்?  வாழை மரத்தின் பெருமை அடங்குவதற்குள் திடீரென ஒரு புதிய மனிதன் கத்தியுடன் வந்தான்.  முதலாவது மனிதன் பிடித்துக்கொள்ள ,  அதன் குலைகளை வெட்டி எடுத்தான்.  வாழை மரம் கதறியது.  அதன் பெருமையெல்லாம் காணாமல் போனது.  மரண பயம் வந்துவிட்டது.  அது பயந்தபடியே  அடுத்த காரியம் நடந்தது.  ஆம் .  வாழைமரம் வெட்டி சாய்க்கப்
பட்டது.  ஒரு வருட காலத்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. துண்டு துண்டாக வெட்டப்பட்டுத்  தோலுறிக்கப் பட்டது. 
                 தென்னை மரம்  இன்னும் பழையபடியே புன்னகைத்துக் கொண்டிருந்தது.  அதன் புன்னகைக்கு  என்ன  அர்த்தம்  என்பது இப்போது வாழைமரத்துக்குப் புரிந்தது.
ஒவ்வொரு நாளும் நமக்கும்  எத்தனை கேலிகள் இது போல?
கவலைப்பட வேண்டாம். வேகமாக வளர்வதெல்லாம் ,  வேகமாகவே காணாமல் போகும்.

" ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது, பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன்...

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது.

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது.

டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்.

ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே, " நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க, தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க, இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேறியிருக்கலாம் இல்ல" என்றார்.

பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்.

"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேறியிருக்கேன்"

"எப்படி?"

"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க.. அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா, உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்.

நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க. மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க. இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு. இந்த வட்டாரத்தில் நல்ல பேர் இருக்கு. நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.

நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும். அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம். நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்.

ஆனால் உங்களுக்கு அப்படியில்லை. உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது. உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும். உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும். நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான். உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க. ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.

மேனேஜர் சமோசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்.

நீதி: தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது.

புதன், 26 அக்டோபர், 2016

பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை

மன்னர் அசோகர் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரில் வந்து
கொண்டிருந்த ஒரு வயோதிக புத்த
பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்றார்.அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து
விட்டார். உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு,
இறங்கிச் சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின் காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர்
சங்கடப்பட்டார்."ஒரு மண்டலாதிபதி ஒரு
பரதேசியின் காலில் விழுவதா? அரச
பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?'
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது. அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர்
சிரித்தார். அமைச்சரின் கேள்விக்குப்
பதிலளிக்காமல், ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.""ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு
உடனே வேண்டும். ஏற்பாடு
செய்யுங்கள் அமைச்சரே,''
என்றார்.
மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது. எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற ஏவலர்கள்
நாலாபக்கமும் பறந்தனர்.
ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.
புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.
அன்றுதான் அவன் ஒரு புலியை
வேட்டையாடியிருந்தான்.
மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், ""இம்மூன்றையும் சந்தையில்
விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.'' என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான்.
ஆட்டுத்
தலை அதிகச் சிரமமின்றி விலை போனது. புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர்.
கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க எடுத்துப் போனான்.
மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்
வாங்கியது. ஒரு காசுக்கு கூட அதை
வாங்க யாரும் முன்வரவில்லை.
அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.
""அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!'' என்றார் அசோகர்.
இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்...
""பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர்
போய்விட்டால், இந்த உடம்பு கால் காசு
கூடப் பெறாது.
இலவசமாகக் கூட
இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.
அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன
தவறு? சொல்லப்போனால்
அதுதான் ஞான வாயிலின் முதல் படி!''
என்றார். தன் தவறை உணர்ந்தார்
அமைச்சர்.. நீதி:பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை .....
...

செவ்வாய், 25 அக்டோபர், 2016

எதிர்பாராத திருப்பங்கள்...

எதிர்பாராத திருப்பங்கள்...

#கடவுளிடம் ஒரு #விவசாயி கடுமையாகச் #சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?

எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்.

சனி, 22 அக்டோபர், 2016

புதிர் கதை

புதிர் ! புதிர் ! புதிர் !

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவன் பரம ஏழை. மற்றொருவன் பணக்காரன். பணக்காரனிடம் அவன் தம்பியாகிய ஏழை ஒரு பசுவைக் கேட்டான். அண்ணன் பசுவைக் கொடுப்பதற்கு முன், "என் நிலத்தில் நீ தினமும் வந்து ஓராண்டு உழைக்க வேண்டும்!'' என்றான்.

அவனும் ஒத்துக் கொண்டான். பசுவை வாங்கிக் கொண்ட இளையவன், தான் ஒத்துக்கொண்டது போல் அண்ணன் நிலத்தில் ஓராண்டு முழுவதும் உழைத்தான். ஓராண்டு முடிந்தது. தம்பி அண்ணனிடம் வேலைக்குச் செல்லவில்லை. மறுநாளே பசுவை திருப்பிக் கேட்டான் அண்ணன்.
"ஓராண்டு உன் நிலத்தில் உழைத்தேன் அல்லவா பசு எனக்குத்தான்!'' என்றான்.

மூத்தவன், "அதெப்படி முடியும்? ஓராண்டு காலம் நீ என் பசுவிடம் பால் கறந்து பலனை அனுபவித்தாய் அல்லவா? அதனால் இரண்டிற்கும் சரியாகிவிட்டது!'' என்றான்.

இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் ஒரு பிரபுவிடம் சென்றனர். வழக்கை விசாரித்த பிரபு, அவர்கள் இருவருக்கும் மூன்று புதிர்களைக் கொடுத்து, "இதற்குச் சரியான பதில்களை யார் சொல்கிறீர்களோ அவர்களுக்குத்தான் பசு!'' என்று கூறி புதிரைச் சொன்னார்.

"முதல் புதிர், மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது? இரண்டாவது புதிர், மனிதனுக்கு மிக மகிழ்ச்சியைத் தருவது எது? மூன்றாவது புதிர், அதிக விரைவாகச் செல்வது எது? இந்த மூன்று புதிர்களுக்கும் நாளை விடை கூறுங்கள்!'' என்றார்.

இருவரும் வீட்டிற்கு வந்து மூளையைக் குழப்பி சிந்தித்தனர்.

மறுநாள் காலை பிரபுவைச் சந்தித்தனர். மூத்தவனைப் பிரபு அழைத்து, "என் புதிருக்கு விடை சொல்!'' என்றார். "மேன்மை தங்கிய பிரபு அவர்களே! ஒரு மனிதனுடைய வயிற்றை நிரப்புவது எது என்று கேட்டீர்கள். அதற்குச் சரியான விடை பன்றிக்கறி. கொழுத்த பன்றிக் கறியைச் சாப்பிட்டால் வயிறு நிரம்பும். பல மணி நேரம் பசிக்காது.

"இரண்டாவது, மனிதனுக்கு மகிழ்ச்சியைத் தருவது எது என்று கேட்டீர்கள். அதற்கு விடை பணம். பணம் பெட்டி நிறைய இருக்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது தெரியுமா? பணம் குறையக் குறைய மகிழ்ச்சியும் குறையும்.

"மூன்றாவதாக, அதிவிரைவாகச் செல்வது எது என்று கேட்டீர்கள். அதுற்குச் சரியான விடை வேட்டை நாய். வேட்டை நாய்கள் விரைவாக ஓடி முயல்களைக்கூட பிடித்து விடுகின்றனவே!'' என்று சொல்லிவிட்டு பிரபுவைப் பார்த்து, "பசு எனக்குத்தானே!'' என்று கேட்டான்.
"முட்டாளே! நீ சொன்ன அனைத்தும் அபத்தமான பதில்கள்!'' என்றார் பிரபு.

இளையவன் அழைக்கப்பட்டான்.

"நம் வயிற்றை நிரப்புவது பூமி. பூமி தாயிடம்தான் நாம் உண்ணும் தானியங்களும், கிழங்குகளும் கிடைக்கின்றன. அந்த உணவால்தான் விலங்குகளும், பறவைகளும் வாழ்கின்றன. இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு அதிக மகிழ்ச்சி தருவது தூக்கம். தூக்கத்திற்காக விலையுயர்ந்த செல்வத்தையும் மனிதன் விட்டுவிடுவான்.

"மூன்றாவது, அதிவிரைவாகச் செல்வது நமது சிந்தனை ஓட்டம். அது நாம் விரும்பியபோது விரும்பிய இடத்தில் கொண்டு போய்ச்சேர்க்கும்!''

"இவையே சரியான விடைகள். இந்தப் பசு உனக்கே!''

பசுவைக் கொடுத்தபின் பிரபு கேட்டார். "இந்தப் புதிர்களுக்கு உனக்கு விடை கூறியது யார்?'' என்றார்.

"என் மகள் மரூஸ்யா!''

"அவள் என்ன அவ்வளவு விவேகியா?''

"ஏதோ கொஞ்சம்!''

"என் அளவிற்கு அவளுக்கு அறிவு இருக்கிறதா என்பதை பரீட்சை செய்து பார்த்து விடுகிறேன்!''

பிரபு பத்து அவித்த முட்டைகளை அவனிடம் கொடுத்து, "இதோ இந்த பத்து அவித்த முட்டைகளையும் உன் மகளிடம் கொடுத்து, ஒரு கோழியினால் அடைகாக்க வைத்து, பத்துக் குஞ்சுகளை ஓர் இரவிற்குள் பொரிக்க வைத்து அதே குஞ்சுகளை அதே இரவில் கோழியாக்கி, முட்டை போடவைத்து, பத்து முட்டைகளில் மூன்றை எடுத்து அடையாக்கி நாளைக் காலை உணவிற்கு எனக்குக் கொண்டுவா!'' என்றார்.

தன் மகள் மரூஸ்யாவிடம் சென்று அதை அப்படியே ஒப்புவித்தார் அவளது தந்தை. தன் மகள் இந்தப் புதிருக்கு விடை எப்படிச் சொல்லப்போகிறாள் என்று கவலைப்பட்டார். ஆனால், அவளோ எதிர் புதிர் போட்டாள். தன் தந்தையிடம் வேக வைத்த துவரைகள் அடங்கிய ஒரு பானையைக் கொடுத்து, "இதில் உள்ள துவரையை நிலத்தில் விதைத்து, முற்றியவுடன் அறுத்து எனது கோழிக் குஞ்சுகளுக்கு உணவாக தயாராக வைக்கும்படி கூறுங்கள்!'' என்றாள்.

அவளுடைய தந்தையும் அவ்வாறே பிரபுவிடம் சென்று சொன்னார். துவரையைப் பார்த்த பிரபு அவற்றை நாய்க்குப் போட்டுவிட்டு, சணல் தண்டு ஒன்றைக் கொடுத்து, "இதை ஊறவைத்து காயவைத்து நூறு ஜெகமுள்ள துணி தயாரிக்கச் சொல்!'' என்றார். ஆனால், அவளோ அதற்குப் பதிலாக மிக மெல்லிய குச்சி ஒன்றைக் கொடுத்து, "இதிலிருந்து நூலை நூற்பதற்கு ஒரு ராட்டினமும், கதிரும் செய்து தரும்படிக் கூறுங்கள்!'' என்றாள்.

அவளது அறிவின் ஆழத்தைக் கண்ட பிரபு, "உன் மகளை நாளை என்னை வந்து பார்க்கச் சொல். ஆனால், அவள் நடக்கவோ, சவாரி செய்யவோ கூடாது. வெறுங்காலுடனோ, செருப்புடனோ வரக்கூடாது. பரிசுடனோ, பரிசின்றியோ வரக்கூடாது. இது கடுமையான உத்தரவு!'' என்றார்.

மறுநாள் பனிச்சறுக்கு வண்டியில் வெள்ளாட்டைப் பூட்டி, ஒரு காலில் மட்டும் செருப்பு அணிந்து, முயல் ஒன்றையும், சிட்டுக்குருவி ஒன்றையும் தெரியாமல் எடுத்துச் சென்றாள் மரூஸ்யா. அவள் மிகுந்த புத்திசாலித்தனத்துடன் வருவதைக் கண்ட பிரபு, அவள் மீது நாய்களை ஏவினார். பதிலுக்கு இவள் முயலை வெளியே விட, நாய்கள் முயலைத் துரத்தின.

"இதோ உங்களுக்கு ஒரு சிறிய பரிசு!'' என்று சிட்டுக்குருவியைக் கொடுத்தாள். அது அவரது கையில் சிக்காமல் பறந்துவிட்டது. தான் சொல்லியபடியே வந்துவிட்ட அவளை நினைத்துப் பெருமைப் பட்டார் பிரபு. அப்போது இருவர் வழக்கு ஒன்றைக் கொண்டு வந்தனர்.

"நாங்கள் இருவரும் அடுத்தடுத்து இரு குதிரைகளை ஓர் இரவில் கட்டி இருந்தோம். இரண்டு குதிரைகளும் அன்றிரவே குட்டிகளை ஈன்றன. அவனுடைய குதிரையின் குட்டி இறந்துவிட்டது. என்னுடைய குட்டியைப் பார்த்து அவனுடைய குதிரைக் குட்டி என்கிறான்!'' என்றான் ஒருவன். அடுத்தவனைக் கேட்டதற்கு அவனும் அவ்வாறே பதில் சொன்னான்.

பிரபு இரு குதிரைகளையும் தனித்தனியே கட்டச் சொல்லி, குட்டியை விடச்சொன்னார். குட்டி இரு குதிரைகளிடமும் செல்லாமல் தனியே ஓடிவிட்டது. அந்தத் தீர்ப்பை அவர் மரூஸ்யாவிடம் கேட்டார். மரூஸ்யா குட்டியைக் கட்டச் சொல்லி குதிரைகளை அவிழ்த்துவிடும்படி கூறினாள். அவ்வாறே செய்தனர். தாய்க்குதிரை தன் குட்டியைத் தேடிக்கொண்டு ஓடிவந்தது.

பிரபுவின் தலைக்கனம் குறைந்தது. தன்னைவிட மரூஸ்யா புத்திசாலி என்று ஒப்புக்கொண்டார். அவளுக்கு வெகுமதியளித்துப் பாராட்டினார்.

நீதி: வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.