வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உழைப்பு

உழைப்பு

பிரபு, உங்களுக்குக் கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள் வேலையைச் சொல்லித்தருவதில்லையாம்! ரகு மணிக்கணக்கில் பக்கத்துல இருந்து சொல்லித் தருகிறாம்'' என்று கேட்டார் பொதுமேலாளர். ""மன்னிக்கனும் சார். ஏதாவது ஒரு புதிய வேலையை எங்கள் இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள் ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்தவாரம் அதே போல வேøயை நீங்கள் அவர்களுக்குக் கொடுத்து நீங்களே நேரடியாக கண்காணியுங்கள் என்றான் பிரபு. அதேபோல ரகுவுக்கு பிரபுக்கும் புதுவேலையைக் கொடுத்தார் பொதுமேலாளர். ரகுவின் ஆள் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில் பிரபுவின் ஆள் வேலையை முடித்துவிட்டான். ரகுவின் ஆள் மூன்று முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான். ஒரு வழியாக 5 மணிநேரத்தில் முடித்தான். பொதுமேலாளர் பிரபுவை அழைத்து,
எப்படி முடிந்தது? என்று கேட்டார் பொதுமேலாளர்.
""சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழத்தாக சொல்லி கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது. அதனால் விளைவுகளை மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ என்று நேரம் கொடுத்து விட்டுடணும். தேடிப்பிடிச்சு கத்துக்கிட்டா, கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும் பணத்திற்கு மதிப்பு அதிகம்'' என்றான் பிரபு, ""நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைப்படுகிறேன் என்றார் பொதுமேலாளர்.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அன்பு என்றால் இதுதான்!



அன்பு என்றால் இதுதான்!

அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை.

திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.

இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.

மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது.

முதலில் கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு திரும்பி வந்தாள்.

ஏனென்று கேட்டபோது சொன்னாள்:

“நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.

வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன்

குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்...”

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார்:

“அன்பு என்றால் இதுதான்!”

ஒன்றுமே கொடுக்க வேண்டாம். எதையுமே பறிக்காமல் இருந்தால் அதுவே போதும்...

எதையும், யாரையும் காயப்படுத்தாமல் இருப்போமே...

நாம் உலகிற்கு எதையேனும்
கொடுக்க வேண்டுமென
நினைத்தால் அன்பைக் கொடுப்போம்...

ஏனெனில் உலகில் எங்கும் பரவிக் கிடப்பது அன்பு ஒன்று தான்... ஆனால் உலகம்  அதிகமாக ஏங்கிக் கிடப்பதும் அதே அன்புக்காகத்தான்...

 அனைவரிடமும் அன்புடன் பழகுவோம்...

                       -மகிழ்ச்சி

புதன், 19 ஏப்ரல், 2017

கிடைத்தவைகளை அனுபவிக்கத் தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி அலைகிறோம்....

அருமையான கதை.
-------------------------------
ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)
கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்
டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமாக வீடு திரும்பினான்.
மீதி 99 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட கட்டு அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக ஒருவன் வந்தான். இந்த நோட்டுக்கட்டைப் பார்த்தான். எடுத்தான்.
பரபரவென்று எண்ணினான். 99 நோட்டுகள்.
மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினான்.
99 நோட்டுகள்தான்.
வங்கியில் 99 நோட்டுகள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே....
அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்
டு இங்கே பக்கத்தில் எங்கேனும்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தான்...............
அந்த ஒற்றை பத்துரூபாயைத்
தேடினான்.... தேடினான்.... தேடினான்....
இன்னும் தேடிக்கொண்டிருக
்கிறான் --------
--என்று சொல்லி கலகலவென்று சிரித்தார் பூஜ்ய குருதேவ் அவர்கள்.
பத்து ரூபாய் கிடைத்தவன் திருப்தியாக சாப்பிட்டுவிட்ட
ு சந்தோஷமாக சென்றான்.
990 ரூபாய் கிடைத்தவன் அதை அனுபவிக்காமல், இன்னம் ஒரு பத்து ரூபாய்க்காக அல்லாடிக்கொண்டிருக்கிறான்.
கருத்து : நம்மில் பலர் இப்படித்தான்
கிடைத்தவைகளை அனுபவிக்கத்
தெரியாமல் கிடைக்காதவைகளைத் தேடி
அலைந்து உடலும் மனமும் சோர்ந்து
அல்லலுறுகிறோம்.

திங்கள், 17 ஏப்ரல், 2017

நண்பனா? எதிரியா? முடிவு செய் சிறு கதை

நண்பனா? எதிரியா? முடிவு செய்
சிறு கதை

அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.

வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.

வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.

இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.

வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.

இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.

வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.

இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.

முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.

விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.

ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”

பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.

“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”

அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.

தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான்.

குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.

தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.

பிரச்சனை தான் வேறு வேறு.

நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

ஆடுகள் முக்கியம் தான்.

ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.

ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்.

மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.

அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.

இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.

விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.

ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.
குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.

படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.
கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.

உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.
தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.

எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).

இதனால் என்ன என்ன பயன்? தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

ராமனா ராவணனா...

ராமனா ராவணனா...

ஒரு கருவுற்ற தாய் தன மகளிடம் கேட்கிறாள்,"உனக்கு தம்பி வேண்டுமா இல்லை தங்கை வேண்டுமா?"

மகள் : தம்பி

தாய் : யாரைப் போல?.

மகள் : ராவணனைப் போல.

தாய் :ஏன் இப்படி முட்டாள்தனமா பேசற? உனக்கு புத்தி இல்லையா?.

மகள் : ஏன் இல்லாம அம்மா? இராவணன் தனது ராஜபோக வாழ்வையும், ராஜ்யத்தையும் தனது சகோதரி அவமதிக்கப்பட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக இழந்தவர்.
அவர் தனது எதிரியின் மனைவியை சிறை வைத்தபோதும், சீதையை அவளது விருப்பத்திற்கு மாறாக தீண்டவில்லை. எனக்கு ஏன் அப்படி ஒரு சகோதரன் இருக்க கூடாது?
ஒரு சலைவை தொழிலாளி கூறினான் என்பதற்காக, தன்னுடன் நிழலை போல வாழ்ந்து வந்த கர்ப்பவதியான தன மனைவியை பிரிந்த ராமரைப் போன்ற ஒரு சகோதரன் எனக்கு எதற்கு?
பதினான்கு ஆண்டு வனவாசமும், அக்கினி பரீட்ச்சையும் செய்து தன கற்பை நிரூபிக்க போராட வைத்த ஒருவரை  எப்படி சிறந்தவராக நினைக்க முடியும்?.
அம்மா, நீ ஒருவருக்கு மனைவியாகவும், வேறொருவருக்கு சகோதரியாகவும் இருந்து கொண்டு, நீ ஏன் உன் மகன் "ராமரை"போல இருக்க வேண்டும் என்று விருப்பப்படுகிறாய்???

தாயின் கண்களில் கண்ணீர் வந்தது.

திங்கள், 10 ஏப்ரல், 2017

படித்ததில் பிடித்த துருக்கி நாட்டுக் கதை. . . .

படித்ததில் பிடித்த துருக்கி நாட்டுக் கதை. . . .

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்கு தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக்கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான். அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான். ‘

‘தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன். ‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள்.

இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான். ‘‘இந்த மணியை எதற்கு கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையை சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது. நெசவாளியைப் பார்த்து ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்துகொண்டிருக் கும்போது வாய் சும்மாதானே இருக் கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்?

உள்ளே வரலாம்தானே எனக் கேட்டான் அரசன். அதற்கு நெசவாளி சொன்னான்: ‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணை குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றை குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

*நெசவாளி சொன்னான்:*
‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண்.

ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களை சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்.’’

ஒருவன் விரும்பினால் ஒரே நேரத் தில் கற்றுக்கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டை கவனிக்க வும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

ஒரு தேசத்தை நிர்வாகம் செய்வதற்கு இப்படியானவர்களே தேவை என்று முடிவு செய்த அரசன், அந்த நெசவாளியைத் தனது நாட்டின் மந்திரியாக நியமித்தான் . . .