ஞாயிறு, 21 மே, 2017

வாக்குறுதியும் ...எதிர்பார்ப்பும்.....

வாக்குறுதியும் ...எதிர்பார்ப்பும்.....

கடுங்குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.....

அரண்மனைவாசலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.

" குளிர் கடுமையாக இருக்கிறதே. அதை நீ உணரவில்லையா..?" என்று கேட்டான்.

''ஆம். உணர்கிறேன் மன்னா. ஆனால், குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே ...'' என்றான் காவலாளி.

அதற்கு மன்னன், ''கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்...'' என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.

மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.

அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்துவிட்டான்.

காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான்.அவனருகே ஒரு கடிதம் இருந்தது.

அந்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

"மன்னா!! இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கிக்கொண்டிருந்தேன்.
ஆனால், குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குலைத்து என்னை கொன்றுவிட்டது.....".

ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.
எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.

நீங்கள் அறியமாட்டீர்!... உங்களின் நிறைவேற்றாத வாக்குறுதி நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று!!!

ஞாயிறு, 14 மே, 2017

இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவர்கள் ...

இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவர்கள் ...

ஒருவன் தன்னுடைய தொழிலில் படு தோல்வியடைந்த நிலையில் தான் நடந்து வந்த வழியில், தெரு முனையில் போவோர், வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது எதிரில் உள்ள குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பை தொட்டியில் தனக்கு தேவையான பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார். மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது.
இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த அந்த நபர் கூறிய வார்த்தைகள் ,
ஒரு சிறிய குப்பை தொட்டியில் இத்தனை பேர் பிழைத்து வாழ்கிறார்கள் என்றால், இந்த பரந்து , விரிந்து கிடக்கும் இவ்வுலகில் நாம் அனைவரும் எப்படி எல்லாம் பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு இனி தனக்கு தோல்வியே கிடையாது , இனி வரும் காலங்கள் பொற்காலமே , மிக பெரிய வெற்றியே என தன்னம்பிக்கையுடன் தன் பழைய தொழிலை தொடங்க சென்றார்.
இந்த பரந்த உலகில் நாம் அனைவரும் ஜெயிக்க மட்டுமே பிறந்தவர்கள் ..

வியாழன், 4 மே, 2017

நன்றி கடன்

நன்றி கடன்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

படித்ததும் பதிந்தேன்.