வியாழன், 24 மே, 2018

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே...



பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே...

கடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் செருப்பு காணாமல் போய்விட்டது. அவன் உடனே கடற்கரையில் எழுதினான், “இந்தக் கடல் மாபெரும் திருடன்...!”

கொஞ்சம் தூரத்தில் ஒருவர் அதிகமாக மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்ததை விடவும் அதிகமாக மீன்கள் வலையில் சிக்கின. அவர் அக்கடற்கரையில் எழுதினார், “இக்கடல் பெரும் கொடையாளியப்பா...!”

அதே கடலில் ஒருவன் நீந்தச் சென்று மூழ்கிவிட்டான். மகன் மீது அதிக பிரியமுடன் இருந்த அவன் தாய் அக்கடற்கரையில் எழுதினாள், "இக்கடல் மக்களை கொன்று குவிக்கின்றதே...!”

ஓர் வயது முதிர்ந்த மனிதர் கடலுக்குச் சென்று முத்துக்களை வேட்டையாடிக்கொண்டு வந்தார். அவர் மிக்க மகிழ்ச்சியோடு அக்கடற்கரையில் எழுதினார், “இந்தக் கடல் ஒன்றே போதும். நான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சியோடு இருக்கலாம்...!”

ஓர் பெரும் அலை வந்து இவர்கள் அனைவரும் எழுதியவற்றை அழித்துவிட்டுச்சென்றது.

பிறர் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளாதே.

இவ்வுலகை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கின்றனர்.

உன் நட்பும், சகோதரத்துவமும் நிலைக்க வேண்டுமானால் நீ பிறரின் தவறுகளை உன் மனதிலிருந்து அழித்துவிடு.

தவறுக்காக உன் நட்பையோ, சகோதரத்துவத்தையோ அழித்துவிடாதே.

நீ ஓர் கெடுதியை சந்திக்க நேர்ந்தால் அதை விடவும் பலமாக அதற்கு பதிலடி கொடுக்க வேண்டுமென ஒரு போதும் எண்ணாதே.

சிறிது சிந்தித்து, நளினமாக அதை கையாளு........

படித்ததில் ரசித்தது.

வியாழன், 10 மே, 2018

இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!


இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!

மீன் விற்கும் ஒரு பெண்ணும், பூ விற்கும் ஒரு பெண்ணும், நல்ல தோழிகள். ஒருநாள் இரவு, பூ விற்கும் பெண்ணின் வீட்டில், மீன் விற்கும் பெண் தங்க நேர்ந்தது.

 இரவு நன்கு தூங்கினாயா?எனப் பூ விற்கும் பெண், மறுநாள் காலையில் கேட்க, அதை ஏன் கேக்குற போ... நேத்துப் பூரா எனக்குத் தூக்கமே வரலை.. என, சொன்னாள் மீனம்மா.

அப்படியா... ஏண்டி?

உன் வீட்டில இருந்த பூவோட வாசம், என்னை என்னென்னமோ செய்துடுச்சு. நெடி தாங்கலை; அதனால, தூக்கம் வரலை... என்றாளாம் மீனம்மா.

மனிதர்கள் பலரும், இப்படித் தான் இருக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறான எது ஒன்றை பற்றியும், மலைத்துப் பேசுகின்றனர்; மறுக்கின்றனர். செயலில் இறங்கும் முன்பே, குரலிலேயே களைப்பு காட்டுகின்றனர்.

என் கூட வேலை பார்க்கிறவரோட மகன் கல்யாணம்; வா... போயிட்டு வரலாம்...' என கணவர் அழைக்கிற போது, பெரும்பாலான மனைவியர் சொல்கிற பதில்... எனக்கு அங்கே யாரையுமே தெரியாது; நான் தனியா உட்கார்ந்திருக்கணும். உங்களுக்கு, உங்களோட வேலை செய்யுறவங்களைக் கண்டா, தலை கால் புரியாது. என்னை, அம்போ'ன்னு விட்டுடுவீங்க. நான் வரலை; நீங்க போயிட்டு வந்தாப் போதும்; ஆளை விடுங்க...

இந்த வசனங்களில், சில மாறுதல் இருக்கலாமே தவிர, பதில் என்னமோ மறுப்பு தான்; பதில் என்னவோ அலுப்பு தான்.

முதன் முதலில் பள்ளியில் சேர்த்த போது, நாம் அழஅழக் கொண்டு போய், இரக்கமில்லாமல் பள்ளியில் விட்டனர். அங்கு யாரைத் தெரிந்தது... பின், பெற்றோரை விடவும், தோழர்கள், தோழிகள் நமக்குப் பெரிதாகி விடவில்லையா?

வங்கி, தபால் நிலையம்...

நான் இதுவரை அங்கேயெல்லாம் போனதில்லை; எனக்கு எதுவும் தெரியாது!

எங்கே போனாலும், சிவப்புக் கம்பள வரவேற்பும், ராஜமரியாதையும் எதிர்பார்க்கிற குணம், என்ன குணம்!

பள்ளி மற்றும் கல்லூரிக்கு அப்பாற்பட்டு இருக்கிற வெளி உலகமும், ஒரு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் தான்; அது, எத்தனையோ பாடங்களை பயிற்றுவிக்கிறது. அறிமுகமாகிற நபர்கள், நூற்றுக்கணக்கான டியூஷன் வகுப்புகளை, காசு வாங்கிக் கொள்ளாமல், நமக்கு நடத்துகின்றனர்.
வாழ்வின் உண்மையான சுவையை, நன்கு உணர வேண்டுமானால், முதலில், மனச்சிறகுகளை விரிக்க வேண்டும்.

எந்தக் கஷ்டத்தையும் சந்திக்கக் கூடாது; ஒரு கஷ்டமும் கூடாது. மேனா மினுக்கிகளாகவே வாழ்ந்து விட்டுப் போய் விடுகிறேன்...' என்று எதிர்பார்க்கும் வாழ்க்கை, தேங்கிப் போன குட்டைக்குச் சமம்.

அருவியாய் மாறி, ஆறாய் ஓடி, கடலாய் பரந்து, வாழ்வின் மறுபக்கங்கள் இன்னின்ன என்பதை, உணரத் தலைப்பட முன்வர வேண்டும்.
என் மகளை, கண்ணுக்குள்ளே வச்சு வளர்த்துட்டேன்; நீங்களும் இவளை மகளைப் போலப் பார்த்துக்கணும்...என்று, கன்னிகாதானத்தன்று, கைத்தலம் பற்றக் கொடுக்கிற தாய் - தந்தையை, நல்ல பெற்றோராக நான் கருதவில்லை.

எல்லாத்தையும் நல்லாவே கத்துக் கொடுத்திருக்கோம்; நாங்க விட்டதை நீங்க சொல்லிக் கொடுங்க... என்றல்லவா ஒப்படைக்க வேண்டும்?

தாய் வீட்டில் சங்கிலியிட்டு வளர்த்தால் தான், புகுந்த வீடு, பூமாலைத் தோரணமாகப்படும்.
ஒரு சொல் கூடத் தாங்காத பெண்ணாக ஒருத்தியை வளர்த்தால், அது ஒரு மாத, ஒரு ஆண்டு கதையாக ஆகிவிடும்.

இடைஞ்சல்களே இல்லாத தொழில், திட்டாத அதிகாரி, தண்டிக்காத முதலாளி, கொடுத்தாலொழிய வாடகை கேட்காத வீட்டுக்காரர், தவறைச் சுட்டிக் காட்டாத நண்பன் என்றெல்லாம் எதிர்பார்த்து, அப்படி அமையாத போது, இவர்கள் நொந்து கொள்கின்றனர்.


எந்த ஒரு மனிதனது வாழ்க்கையும், மலர் பாதையால் அமைக்கப்பட முடியாது. இடையூறுகளற்ற வாழ்க்கையை எதிர்பார்ப்பது அழகல்ல; அதற்கு பழகுவதே புத்திசாலித்தனம்!
ஆற்றுப் படுகைகளில் கிடக்கும் அழகான கூழாங்கற்களை ரசிக்கிறோம். ஆனால், அது மோசமான உருவத்தோடு தான், தன் பயணத்தை, மலையிலிருந்து துவங்கியது என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்!

எனக்கு எந்தக் கஷ்டமும் தராதே... எல்லாம் நல்லபடி நடக்கணும்!' எனக் கடவுளிடம் வேண்டும் பக்தன், தவறு செய்கிறான்.

எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் மனத்திடத்தை, பலத்தை எனக்குத் தா... என வேண்டுபவனே நடைமுறையாளன்.


செவ்வாய், 8 மே, 2018

இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!?


இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!?

இந்து சாஸ்திரங்களில் அசுரர்களின் சிற்பக்கலை வல்லுனராக மயன் என்பவரைப் பற்றி சொல்லப்படுகிறது. இவரை மயா, மயாசுரன், என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்த அசுரக்குல சிற்பி மயனின் ஒரே மகள்தான் மண்டோதர., இவரது பெயர் மந்தோதரி என்றுதான் முதலில் அழைக்கபட்டதாம்.

சிவன்பால் கொண்ட பேரன்பினால், தன் மகளையும் சிவ நாமத்தினால் அனைவரும் உச்சரிக்க வேண்டும் என்பதால் மந்தோதரி என்று பெயர் வைத்தானாம் மயன், ஆனால் வரலாற்று ஆசிரியர்கள் மந்தோதரி என்றால் மெல்லிடையாள் என்று கருத்து செல்கின்றனர். பிற்காலத்தில் சிறந்த சிவபக்தையாக திகழ்ந்த மண்டோதரி அழகியாகவும், செல்வ வளம் பொருந்தியவளாகவும் வளர்க்கப்பட்டாள்.

தனக்காக ஒரு நகரத்தை நிர்மாணிக்கும் பொருட்டு மயனை சந்திக்க வந்த இராவணன், அங்கே மண்டோதரியை கண்டதும் அவள் அழகில் மயங்கினான். அவ்வளவு பெரிய பேரழகியை தன்னுடைய மனைவியாக அடைய விருப்பபட்டு மயனிடம் தன் விருப்பத்தைக் கூறினான். மயனும் அதற்கு மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.

ஏனெனில், இராவணனுடைய பராக்கிரமம் உலகறிந்த ஒன்றாக இருந்தது. இராவணன் வீரமிக்க அரசனாக மட்டுமல்லாமல், சிறந்த சிவப்பக்தராகவும் இருந்தான். அதுப்போல மயனும் சிறந்த சிவபக்தன், சிவாய நம என்ற மந்திரத்தை தினமும் உச்சரிப்பவன், ஆகையால் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டார்.

ஆனால் மரபுவழி கதைகளில் இராவணன் ஒருமுறை காட்டுக்கு வேட்டையாட சென்றப்பொழுது ,வேட்டையை முடித்து சிறிது ஒய்வெடுத்தானாம். அப்பொழுது, இசைபிரியனான இராவணன் வீணையை மீட்டி பாடிய சிவகீதம், வீணையின் சப்த நாளங்களோடு சேர்ந்து, மண்டோதரியின் செவி வழியில் புகுந்தது, காமன் விடு தூதாக கன்னி மனதை பறித்து காதல் வயப்படவைத்துவிட்டது எனவும், அவள் உடனே தந்தையே! இந்த இன்னிசை நாதம் எங்கே இருந்து வருகிறது என கேட்டாளாம்,


இசை வந்த திசை நோக்கி சென்ற மயன் அங்கே இராவணனை கண்டு அழைத்துவந்தாராம் மண்டோதரியின் அழகில் மயங்கிய ராவணன் ,மயனிடம் தன விருப்பத்தை சொன்னானாம், ஏற்கனவே, இராவணனை நன்கு அறிந்த மயன், இந்த திருமணத்திற்க்கு உடனே சம்மதம் தெரிவித்து மண்டோதரியை இராவணனுக்கு மணமுடித்து வைத்தார் என்று சொல்லப்படுகிறது.

இருவருமே சிவப்பக்தர்களாகவும், இசையை ரசிப்பவர்கள் ஆகவும் இனிமையாக வாழ்ந்து வந்தார்கள். பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக இருந்தாள். இவளுடைய பதிவிரதத்தின் காரணமாகத் தான் அசுரகுணம் கொண்ட இராவணன்,

பல்வேறு தவறான செயல்களைச் செய்தபோதும் அதற்கான தண்டனைகளில் இருந்து காப்பாற்றபட்டான். அந்தச் சமயத்தில் இராவணனுக்கு மண்டோதரியைத் தவிர, வேறு சில மனைவிகளும் இருந்தார்கள். ஆனாலும், அவன் மண்டோதரியிடமே அதிக அன்பும், பாசமாய் இருந்தான்.

இப்படி இருக்கையில் தன்னுடைய மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணிடம் இராவணன் மையல் கொண்டான். அவள் பெயர் வேதவதி. இதையெல்லாம் தெரிந்து கொண்ட மண்டோதரி அவனை நல்வழிபடுத்த பல அறிவுரைகளை எடுத்து கூறினாள். அப்பொழுதும் இராவணனுக்கு உண்மையானவளாகவும், நம்பிக்கைக்கு உரியவளாகவும் இருந்தாள் மண்டோதரி. இந்த வேதவதிதான் ராவணனுடைய அழிவுக்கு காரணமாக இருந்தாள் என கூறபடுகிறது.


யார் இந்த வேதவதி? பிருகஸ்பதியின் புத்திரரான, பிரம்ம ரிஷி குஸத்வஜரின்குசத்துவ முனிவர், வேதம் ஓதிக்கொண்டிருக்கும் சமயத்தில் குழந்தை பிறந்ததால் அவளுக்கு 'வேதவதி' என்று பெயரிட்டு வளர்த்தார். அவள் வளர்ந்து பருவமடைந்தபோது, அவளது அழகில் மயங்கி தேவர்கள், அசுரர்கள் முதலானோர் அவளை மணந்துக் கொள்ள விரும்பினார்கள். முனிவரோ, தம் மகளுக்குத் தகுந்த வரன் திருமால்தான் என்று எண்ணினார்.

அவளை மணந்துக் கொள்ள விரும்பி சம்பு என்னும் அரக்கன் தன் விருப்பத்தைத் முனிவரிடம் தெரிவித்தான். முனிவர் அவனுக்குப் பெண் தர மறுத்ததால் இரவில் தூங்கிக் கொண்டிருந்த முனிவரை கொன்றுவிட்டான் சம்பு, இதனால், துக்கப்பட்டுத் வேதவதியின் தாயார் முனிவருடன் சிதை ஏறிவிட்டார். தனது தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டி ஸ்ரீநாராயணரை நோக்கித் தவம் புரிந்துகொண்டிருந்தாள் வேதவதி....,

அப்போது திக்விஜயம் மேற்கொண்ட இராவணன் காட்டில் தவம் செய்து வந்த வேதவதியைக் கண்டு அவள் அழகில் மயங்கி, அவளை மணந்துக் கொள்ள ஆசைப்பட்டான். அவள் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால் இராவணன், அவளை வலியத் தீண்டினான். அப்பொழுது வேதவதியோ தான் விஷ்ணுவை மணாளனாக அடைய தவம் செய்கிறேன், என்னைத் தீண்டாமல் விலகி செல்வாயாக, என சாந்தமுடன் கூறினாள்.

மதிமயங்கி இருந்த இராவணன், யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்துத் தூக்கினான் இராவணன், அப்பொழுது வேதவதி, தன் கையைத் தூக்கி அதை வாளாக மாற்றி தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டால், என் தபோவலிமையை இழக்க வேண்டியதிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள்.

பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரில் அழகிய பெண்குழந்தையாய் அவதரித்தாள். அவளை, தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான் இராவணான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார்.

இதனால் இராவணன் அவளைக் கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதைதான் ராவணனை கொல்ல அவதாரம் எடுத்து இருக்கிறாள் என மண்டோதரி இராவணனை எச்சரித்தாள் .


இதைவிட சுவாரஸ்யம் என்னனா சீதா தேவியின் தாய் மண்டோதரியா? இப்படியும் சில மரபு வழி கதைகள் உண்டு. வால்மீகி ராமாயணத்தில் மண்டோதரியை சீதையின் தாயாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், அதன் பிறகு வந்த சில ராமாயண படைப்புக்களில் மண்டோதரியை சீதையின் தாயாகவோ அல்லது சீதையின் பிறப்பிற்குக் காரணமான பெண்ணாகவோ குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், இராவணனின் அரண்மனையில், இராவணனால் கொல்லப்பட்ட முனிவர்களின் ரத்தத்தை ஒரு பெரிய பானையில் சேகரித்து வைத்திருந்தார்களாம், அதே சமயம், கிரிட்சமாடா என்ற முனிவர் இலட்சுமி தேவி தன்னுடைய மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் செய்துக்கொண்டு இருந்தார்.

அவர் தர்ப்பை புல்லின் பாலை தன்னுடைய மந்திரங்களினால் சுத்திகரித்து வைத்திருந்தார். இலட்சுமி தேவி அதில் வாசம் செய்வாள் என முனிவரது நம்பிக்கை. ஒருமுறை அந்த முனிவரைக் காணச் சென்ற இராவணன் அந்த புண்ணியமான பாலை தன்னுடயை ரத்தம் நிறைந்த பானைக்குள் ஊற்றிவிட்டான். இராவணனின் இந்த தகாதச் செயலைக் கண்டு மனம் வெறுத்த மண்டோதரி, மிகவும் கொடிய விஷமான அந்த ரத்தத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது, கிரிட்சமாட முனிவரின் தவ வலிமையால் காப்பாற்றப்பட்டு இலக்ஷ்மி தேவியின் அவதாரத்தை குழந்தையாக பெற்றேடுத்தாள் எனச் சொல்லப்படுகிறது.

இராவணனிடம் இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அந்த குழந்தையை குருஷேத்திரத்திற்கு அருகில் அவர் புதைத்து வைத்தார். அந்த பெண் குழந்தையைக் கண்டெடுத்த ஜனகர் அவளுக்கு சீதை என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் எனவும் மரபுவழி கதைகளில் சொல்லபடுவதுண்டு.


ஆனால்,. வாசுதேவஹிந்தி, உத்தர புராணம் மற்றும் பிற சமண வகை இராமாயணங்களில் சீதையானவள் இராவணனுக்கும், மண்டோதரிக்கும் பிறந்த குழந்தையாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், மண்டோதரியை மணந்துக்கொள்ளும் விருப்பத்தை மயனிடம் இராவணன் கேட்டுக்கொண்டபோது, இராவணனுடைய ஜாதகத்தை கணித்த மயன், இந்த தம்பதியருக்கு பிறக்கும் முதல் குழந்தை ராவணனின் வம்சத்தை அழித்துவிடும். ஆகவே, அந்தக் குழந்தையைக் கொன்றுவிடவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார் மயன், அவர் அறிவுரையைக் காதில் கேட்காத இராவணன், திருமணதிற்கு பிறகு மண்டோதரிக்குப் பிறந்த முதல் குழந்தையான சீதையை ஜனகரின் நகருக்கு அருகில் ஒரு கூடையில் வைத்து புதைத்து விட்டான் என்றும் சொல்லபடுகிறது.

இந்த இதிகாசத்தின் ஆதாரப் பூர்வமான எழுத்து வடிவங்கள் மட்டும் இன்றி செவிவழிக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகள் கூடத் தங்களுக்கு உரிய பாணியில் மிகவும் சுவாரஸ்யமாக கூறப்பட்டுள்ளது. உத்தர புராணத்தில், அஹகாபுரியின் இளவரசியான மணிவதியின் மீது இராவணன் தவறாக ஆசைக்கொண்டு இருந்தான், ஆகவே அவனை பழிவாங்கவே இராவணன் மற்றும் மண்டோதரிக்கு மகளாக பிறந்தாள் மணிவதி எனவும், அந்த குழந்தையால் இராவணனின் சாம்ராஜ்யம் பேரழிவை சந்திக்கும் என அரசவை ஜோதிடர்கள் குறிபிட்டதிதால இராவணன் அந்தக் குழந்தையைக் கொன்றுவிடுமாறு தன்னுடைய மெய்க்காவலனுக்கு உத்தரவிட்டதாகவும் ஆனால், அந்தக் காவலன் குழந்தையைக் கொல்லாமல், மிதிலாவில் பெட்டியில் வைத்து மண்ணில் புதைத்து விட்டதாகவும் அங்கே ஜனகமகாராஜா சீதையைக் கண்டெடுத்ததாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

சமணர்களின் இராமாயணக் கதைப்படி, சீதை இராவணனின் மகளாகப் பிறந்தார். எனினும், இராவணனின் சாம்ராஜ்யத்தை அந்தக் குழந்தை அழித்துவிடும் என்று சோதிடர்கள் கூறியதால், இராவணன் தன்னுடைய பணியாட்களை அழைத்து சீதையை தொலைதூரத்தில் உள்ள நிலப்பகுதிக்கு கொண்டுச் சென்று புதைத்து விடுமாறு கட்டளையிட்டார். அப்பொழுதுதான் சீதை ஜனகரால் கண்டெடுக்கப்பட்டாள் என்றும் கூறப்படுகிறது.

மேலும், சமணர்களின் இராமயணத்தில், இராவணன், ஒரு தந்தையாக மட்டுமே சீதையின் மேல் அன்பு வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. மண்டோதரியின் வயிற்றில் சீதை பிறந்த போது, இராவணன் அளவிலா சந்தோஷத்தைக் கொண்டிருந்தார் எனவும், இந்தக் குழந்தை சாம்ராஜ்யத்தை அழித்து விடும் என்று சோதிடர்கள் அறிவுருத்தியதால், தன்னுடைய பணியாட்களிடம் சீதையைக் கொண்டு போய் தொலைதூரத்தில் விட்டு விடச் சொல்லியிருக்கிறார். ஆனால், விட்டுட்டு வந்த குழந்தை எங்கிருக்கிறாள் என்பதை அவ்வப்போது இராவணன் தன் ஒற்றர்கள் மூலம் தெரிந்துக்கொண்டு வந்துள்ளான் எனவும் ,சீதையை ஜனக மகராஜா இளவரசியாக தத்தெடுத்துக் கொண்டதை அறிந்தவுடன் இராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் எனவும், சீதைக்கு திருமணம் நடந்த சமயத்தில் கூட அந்த சுயம்வரத்தில் இராவணனும் கலந்து கொண்டான் எனவும், அங்கே அயோத்தி நகரத்தைச் சேர்ந்த ஆரிய இளவரசர் இராமர் சீதையை மணமுடித்ததைக் கண்டு இராவணன் மகிழ்ச்சியடைந்தான் எனவும் இராமரை 14 ஆண்டுகள் காட்டுக்குள் வனவாசம் அனுப்பும் வரை அனைத்தும் நல்லபடியாகவே இருந்தது என சமணர்களின் இராமாயண குறிப்புகளில் சொல்லப்பட்டு இருகின்றன .

தொடர்ந்து சீதையை கண்காணித்து வந்த இராவணன் இராமர் வனவாசம் சென்று வனாந்திரங்களில் துன்பப்பட்டு வந்தபோது, சீதாதேவியும் இராமருடன் சேர்ந்து துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை இராவணன் அறிந்துகொண்டான், எனவே, தன்னுடைய மகளை கடத்திக் கொண்டு வருவதன் மூலமாக அவளுடைய துன்பத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று இராவணன் நினைத்தார் என்றும், ஆகையால்தான், சீதாதேவியை இராவணன் கடத்திக்கொண்டு வந்து இலங்கையில் வைத்தார். இதனை பழிவாங்கும் செயலாகப் புரிந்துக் கொண்ட இராமரும், லட்சுமணரும், இராவணனின் மீது போர் தொடுத்தனர் என்றும், ஆனால், இராவணன் செய்தது தன்னுடைய மகளை துன்பத்திலிருந்து பாதுகாக்கும் செயல்தான் எனவும், இராவணன் தூங்கும் போதும்கூட சீதையின் பெயரைச் சொன்னதால், அவனுடைய மனைவியான மண்டோதரியும் கூட தவறாக நினைத்துவிட்டாள் என சமண ராமாயண குறிப்புகள் கூறுகின்றன. சீதை இராவணனுடைய மகளா?! இல்லையா?! என்பது நமக்குத் தெரியாவிட்டாலும் இராவணனின் அழிவுக்குக் காரணம் சீதைதான் எனபது மட்டும் உண்மை.

இதேப்போல, நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும்,,கற்றுணர்ந்த இராவணனுக்கு பெண் பாவத்தை பற்றி தெரியும், ஆதலால் அவன் சீதையை கடத்தவில்லை, சீதை லட்சுமிதேவியின் அவதாரம். சிறந்த ஆட்சியாளனான, இராவணன் உலகத்தின் செல்வங்களைலாம் இலங்கைக்குக் கொண்டு சென்றுவிட்டான்.


அதேப்போல் உலக இயக்கமும் இலங்கையில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்பதற்காக சிவனையும் இலங்கைக்கு கொண்டு சென்ற போதுதான் அவன் விநாயகரால் தடுத்து நிறுத்தப்பட்டு தரையில் வைத்த சிவலிங்கத்தை எடுக்கமுடியாமல் தோல்வியுற்றான். அவன், உலகத்தின் செல்வதையும், உலகத்தின் இயக்கத்தையும், இலங்கைக்குக் கொண்டுச் சென்றால் அவனை யாருமே அழிக்கமுடியாத வல்லமை பெற்று இருப்பான், என இன்னொரு செவிவழி கதையும் உண்டு.

இதைபோல் மரபுவழி கதைகளில் இன்னொரு ஒரு கதையும் சொல்லப்படுவதுண்டு, பத்து திசைகளில் தேர் செலுத்தும் வல்லமை உடைய தசரதனுக்கும் கோசல நாட்டு அரசன் பானுமந்தன் மகள், கோசலைக்கும் திருமணம் நிச்சயமாகி இருந்தது. இதை நிச்சயம் செய்தவர், நம்முடைய கலகமுனி நாரதர். நாரதர் வந்தாலே கலகம் வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

இங்கும் அதுப்போலவே நாரதர் திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு, இராவணனிடம் வந்து இந்தத் திருமணம் நடந்தால் கோசலைக்கு பிறக்கும் பிள்ளையால் உனக்கு அழிவு நிச்சயம் என்று சொல்கின்றார். அதேவேளை, கோசலநாடு சென்று இராவணனால் இந்த திருமணம் நிறுத்தபடலாம் என்று பத்தவைத்து விட்டு போகிறார்.

உடனே தசரதன், பத்து கிரீடத்துக்கு அரசனான இராவணனோடு போர் புரிந்து வெற்றி பெறமுடியாது என, கோசல நாட்டில் திருமணத்தை வைக்காமல் கடல் நடுவில் யாருக்கும் தெரியாமல் திருமணத்தை நடத்துகிறார். கோசலையை தேடி இராவணன் கோசல நாடு சென்று அங்கும் கோசலை இல்லாதது கண்டு தன் நாடு திரும்பினான். வரும் வழியில் கடல் நடுவில் ஒரு நகரத்தில் கோசலை இருப்பதை காண்கின்றான். பெண்களை வீரர்கள் தாக்கக் கூடாதது என்பதால் உயிருடனேயே கடத்தி வருகின்றான். தன் தேசம் வந்ததும் அவளைக் கொலை செய்யும்படி கட்டளை இடுகின்றான்.


ஆனால், எல்லா சாஸ்திரங்களையும் கற்ற மண்டோதரி, பெண்ணை கொலை செய்வது அழிவுக்கு ஒப்பானது ஆகும், என்று சொல்லி கோசலையை காப்பாற்றுகிறாள். ஆனால், தன் கணவன் உயிருக்கும் அவளுக்கு பிறக்கும் மகனால் ஆபத்து வர கூடாது என்பதற்காக தசரதனுக்கு புத்திர பாக்கியம் ஏற்படாதவாறு சாபம் இடுகின்றாள்.

விதியை மாற்றி அமைக்க விரும்பாத பார்வதி, பரமேஸ்வரர், .மண்டோதரிக்கும், இராவணனுக்கும் பிறக்கும் பெண் குழந்தையாலேயே உங்களுக்கு அழிவு என்று சாபம் இடுகின்றார்கள். அதனால் தான் மண்டோதரிக்கும் இராவணனுக்கும் பிறக்கும் மூத்த பிள்ளையான சீதையை ஜனகன் வயல் பூமியில் கொண்டு போய் விட்டுவிட்டதாக மரபுவழி கதைகள் கூறுகின்றன.

மண்டோதரி-இராவணன் தம்பதிகளுக்கு மேகநாதன், அதிகயா மற்றும் அக்சயகுமாரர் ஆகிய மூன்று மகன்கள் பிறந்தனர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் வனவாசம் சென்றிருந்த வேளையில் சீதாதேவியை கடத்தினான் இராவணன். மண்டோதரி சீதாதேவியை உடனடியாக இராமனிடம் திருப்பி அனுப்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தாள். ஆனால், இராவணன் எதையும் கேட்கவில்லை. சீதா தேவியின் தலையை துண்டிப்பதற்காக தன்னுடைய வாளை ஓங்கினான் இராவணன். ஆனால், ஒரு பெண்ணைக் கொலை செய்வதென்பது கொடும் பாவச்செயல். ஆகவே, சீதா தேவியை இராவணன் கொல்லக்கூடாது என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டு இராவணனின் கையைப் பிடித்து அந்த பாவச்செயலைத் தடுத்து நிறுத்தினாள் பேரழகியான மண்டோதரி. இது, இராவணனுக்கு அழிவைக் கொண்டு வரும் என்று மண்டோதரி நன்கு அறிந்திருந்தாள் என வால்மீகி ராமாயணத்தில் குறிபிடப்பட்டுள்ளது.