புதன், 31 அக்டோபர், 2018

ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது


ஒட்டகச்சிவிங்கியின் பிறப்பு வித்தியாசமானது.

ஒட்டகச்சிவிங்கி நின்று கொண்டு குட்டிப் போடும் பழக்கமுடையது. சுமார் எட்டு அடி உயரத்தில் இருந்து குட்டியானது பூமியில் விழும்போதே பலமான அடிப்பட்டுக்கொண்டு தான் தன் வாழ்க்கையை துவக்குகிறது.

குட்டி ஒட்டகச்சிவிங்கி தன் தாயின் கருவறையிலிருந்து வெளிவரும்போதே கிழே விழுந்து அடிபடுவதை யோசித்துப்பாருங்கள். கொடுமையான விஷயம்.

இதைவிட கொடுமையான விஷயம் அடுத்தது நடக்கும். தாய் ஒட்டகச் சிவிங்கி தன் குட்டியின் கழுத்தை ஒரு சில நிமிடங்கள் மெதுவாக முத்தமிடும். நாவால் நக்கிவிடும். பின்பு தன் நீண்ட கால்களால் குட்டியை ஓங்கி உதைக்கும். குட்டியானது காற்றில் பறந்து சற்று தள்ளிப் போய் விழும்.

ஏற்கனவேவிழுந்து அடிபட்ட வலி கூட மாறாத நிலையில் அடுத்த அடி. தாயின் கருவறையிலிருந்து வெளிவரும் போது உடம்போடு ஒட்டியிருந்த ஈரம் கூட காயவில்லை. வலியோடு தடுமாறி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனாலும் மீண்டும் தடுமாறி கீழே விழுந்து விடும்.

மீண்டும் தாய் உதைக்கும். குட்டி எழுந்து நிற்க முயற்சி செய்யும். ஆனால் மீண்டும் விழுந்து விடும். குட்டி சுயமாக சொந்த காலில் எழும்பி நிற்கும் வரை தாய் உதைத்துக் கொண்டே இருக்கும்.

காட்டில் உலவும் சிங்கம், புலி , ஓநாய் போன்ற விலங்குகளுக்கு ஒட்டகச் சிவிங்கியின் மாமிசம் மீது அலாதிப் பிரியம். நடக்கத் தெரியாத குட்டியாக இருந்தால் இவை அந்த விலங்குகளுக்கு இரையாகிவிடும் என்று பயப்படும் தாய் தன் குட்டியை உதைத்து நடக்க கற்றுத்தருகிறது.

ஓரிரு நாட்களில் குட்டி ஒட்டகச் சிவிங்கி எழுந்து நடந்து விடுகிறது. இந்த உலகில் மற்ற உயிர்களோடு உயிர் வாழ வேண்டுமென்றால் வலியை தாங்கிக்கொண்டு போராடவேண்டும் என்ற உண்மையை பிறந்த முதல் நாளிலேயே தன் குட்டிகளுக்கு ஒட்டகச்சிவிங்கி கற்றுக்கொடுக்கிறது. குட்டி ஒட்டச்சிவிங்கி கிழே விழுந்ததால் பட்ட வலி தீரும் வரை ஓய்வு எடுத்திருந்தால் மற்ற காட்டு விலங்குகளுக்கு இரையாகிவிடும். ஆனால் அதன் தாய் வலியை தாண்டி வெற்றியை பெறும் சூட்சமத்தை சொல்லிக்கொடுத்து சூழ்நிலைக்கேற்ற வாழ்வை கற்பதற்கு உதவி செய்கிறது.

வலிகளை வெற்றிகளாக்கும் சூட்சமங்களைக் கற்றுக் கொள்வோம்.
ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது கற்றுக் கொள்வோம்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

எப்பொழுதும் பொறுமையாகவே இருங்கள்..!!


எப்பொழுதும் பொறுமையாகவே இருங்கள்..!!

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீனர்கள் மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும்.

ஆனால், அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும்.

அதுவும் எப்படி? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா? 80 அடிகள். நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும்போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை!

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப்பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது..

மகிழ்வித்து மகிழ்