புதன், 8 ஏப்ரல், 2020

ஒருவரின் தரம்


#ஒருவரின்_தரம்

ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து போனார். வயதுக்கு வந்த மகன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். அப்பா இறந்த பிறகு அவரது டைரியில் இருந்த குறிப்பு ஒன்று சற்றே அதிர்ச்சி தந்தது.

அதில் நண்பரிடம் ஒரு லட்சம் கடனாக வாங்கியிருப்பதைத் தந்தை குறிப்பிட்டிருந்தார். அவர் கடன் வாங்கிய விபரம் குடுபத்தில் யாருக்கும் தெரியவில்லை.

இறப்பின் போதும், இறப்பிற்குப் பிறகும் கடன் கொடுத்த அந்த அப்பாவின் நண்பரை வேறு வேறு இடங்களில் சந்தித்து விட்டான். அவரும் இவனிடம் நலம் விசாரித்ததோடு சரி.

அவனது அப்பாவிடம் வழங்கியிருந்த கடன் குறித்து பேசாதது ஆச்சரியம் தந்தது. எனவே தந்தையின் நண்பரைத் தேடிச் சென்றான். சந்தித்து, விவரம் சொன்னான்.

அவர் மெதுவாகச் சொன்னார்,"உங்க அப்பா எனக்குப் பல நேரங்களில் உதவியிருக்கிறார். அவர் ஒரு சமயத்துல உங்க அம்மா உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கேட்டார். கொடுத்தேன்."

"அதுக்கு எந்த ஆதாரமும் என்னிடம் இல்லை. திடீர்னு உங்கப்பா இறந்துட்டார்.

இந்த நிலையில் எந்த ஆதாரமும் இல்லாம, உங்கப்பா எங்கிட்ட கடன் வாங்கியிருக்காருன்னு கேட்குற மனம் எனக்கு வரல. அதுக்கு முக்கிய காரணம், கடன் வாங்கும்போதே இது வீட்டிற்குத் தெரிய வேண்டாம்ன்னு சொன்னார்."

"அவர் இறந்த பிறகும் அவர் வார்த்தைக்கு மதிப்பளிப்பதுதான் நியாயம்னு பட்டது. அதனால நானும் அதை விட்டுட்டேன்" என்றார்."

எங்கப்பா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கலேனாலும் அதைத் திரும்பக் கொடுக்குறது தான் அவரோட மகனுக்கு அடையாளமாக இருக்கும் என்ற மகன், கையோடு கொண்டு சென்றிருந்த பணத்தைத் திரும்பக் கொடுத்தான் நண்பர் நெகிழ்ந்தார்.

ஒரு மனிதனின் பண்பும் செயலும் தான் சமூகத்தில் அவன் தரத்தை தீர்மானிக்கிறது.

இந்தச் சம்பவத்தில் இரண்டு நல்லவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

இது தான் வழக்கு மொழியில்,
நல்லவர்களுக்கு எழுத்து தேவையில்லை; கெட்டவர்களுக்கு எழுதியும் பயனில்லை என்று சொல்வார்கள்.

திங்கள், 3 பிப்ரவரி, 2020

அர்த்தமுள்ள வாழ்க்கை

💟அர்த்தமுள்ள வாழ்க்கை💟

கணவன் மனைவி இருவரும் ...

ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள்.

💟என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....

இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான்

💟இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க... அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....

திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க.... அதான்...என்று இழுத்தாள்.

ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன்.

💟மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க

என்னத்த சொல்ல..

💟ஏதும் சின்னவீடு செட்பண்ணிட்டிங்களா...அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட?

போடி லூசு.. அவன் சிரித்தான்.

ஆனால் அதில் உயிரில்லை.

மெதுவாய் சொன்னான்..

நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான்.

💟என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்....

அவன் இல்லையென தலையாட்டியபடியே...

அவனது அலுவலக பையை திறந்தான்.

ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.

💟என்னங்க இது ..

படி என சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து அமர்ந்தான்.

அவள் படிக்க தொடங்கினாள் ...

அவன் கண்கள் கண்ணீரை சிந்த ஆரம்பித்தது...

அன்புள்ள மகனுக்கு,

கண்டிப்பா என்றைக்காச்சும் இந்த கடிதம் உன் கையில கிடைக்கும்னு நான் நம்புறேன்.

உங்கப்பாவுக்கு மனைவியா உனக்கு அம்மாவ இந்த கடிதம் எழுதுறேன்.

ரொம்ப பெரிய கடிதம் பொறுமையா படி.

அவசரமா வேலை இருக்குனு பாதி படிச்சி மீதிய இன்னொரு நாள் காத்திருந்துப் படிக்காத.

உங்கப்பாவ நான் கல்யாணம் பண்ணும்போது நான் காலேஜ் லெக்சரர்.

அப்புறம் நீ வந்த பிறகு உங்கப்பாக்கு அதிர்ஷ்டம் அடிச்சுது.

இன்னும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ல வளர்ந்தாரு.

அப்புறம் உன் தங்கச்சி பிறந்தா ...

நான் வேலையை விட்டுட்டு வீட்டோட உங்கள கவனிச்சுட்டு இருந்தேன்.

உனக்கு தான் தெரியுமே அப்பா எப்படி பிசின்னு...

கல்யாணம் ஆன ஒரு வருஷம் தான் கனவு வாழ்க்கை.

அப்புறம் எல்லாமே காத்திருந்த வாழ்க்கைதான்.

உங்கப்பாவுக்கு காத்திட்டு இருந்தேன்.

அவர், அவர் உருவாக்க நினைச்ச ஆடம்பர வாழ்க்கைக்காக உழைச்சிட்டு இருந்தார்.

நீங்கள் ரெண்டு பேரும் தான் எனக்கு துணை.

நாம தான் விளையாடுவோம்.

அப்புறம் நீங்க ஸ்கூலுக்கு போய்ட்டீங்க.. நீங்க வரதுக்கு காத்திட்டுருப்பேன்.

ஸ்கூல்விட்டு வந்ததும் கதைகதையா சொல்லுவீங்க..

அதுல பாதி பொய் இருக்கும்..

அதெல்லாம் உங்க கற்பனைன்னு நினைச்சு ரசிச்சேன்.

அப்புறம் நீங்க வளர்ந்தீங்க..

அம்மாட்ட சொல்ல ஏதுமில்லாம போச்சு.

ஆனா உங்கள்ட்ட இருந்து ஆர்டர் மட்டும் வந்துச்சு.

இப்ப வெளியே போகனும்...

இப்படி வெளியே போகணும்னு..

ஆனா வர்ற டைம் கேட்க முடியுமா அம்மாவால்.......

காத்திட்டு இருப்பேன்.

நீங்க சாப்டு வரீங்களா.... சாப்டமா வரீங்களானு பார்க்க காத்திட்டு இருப்பேன்....

நீங்க எக்ஸ்டரா கோச்சிங், பிரண்ட்ஸ் அரட்டைனு..பிசி

இடையில உங்கப்பா உடம்பு முடியாம படுத்துட்டாரு.

அவருக்கு டயத்துக்கு மாத்திரை கொடுக்கனும், மருந்து கொடுக்கணும், பிசியோதெரபி பண்ணனும் காத்திட்டுருப்பேன்.

காத்திட்டு இருக்கிறதே என்னோட வாழ்க்கை ஆகிடுச்சு பாத்தியா?

அப்புறம் உன தங்கச்சி கல்யாணம்...

இப்ப அவ எப்படி இருக்கானு கூட

அவளா முடிவு செய்ற நேரத்திலதான் என் கூட பேச முடியும்....

ஏன்னா அங்க அவ காத்திட்டு இருக்கா .... ஒரு அம்மாவா...

உனக்கு சொல்லவே வேண்டாம்...

அப்பா தொழில எடுத்து செய்ய ஆரம்பிச்ச உடனே

நீ ரொம்ப பிசியாகிட்ட..

நீ கடைசி ஐஞ்சு வருஷத்தில் அம்மாட்ட பேசுனத கொஞ்சம் யோசியேன்...

சாப்டிங்களா, மாத்திர போட்டாச்சா.. ஊசிபோட்டாச்சா... இவ்ளோதான்.

உங்கப்பா வாழ்றா காலத்தில பிசியா இருந்தாரு..

நான் காத்திட்டு இருந்தேன்.

கடைசி காலத்தில் ஏதுவும் இல்லாம இருந்தாரு..

ஆனா மாத்திரைக்கு காத்திட்டு இருந்தாரு...

என்கிட்ட பேச அவருக்கு விசயமே இல்லை...

பேப்பர் படிச்சாரு. புக் படிச்சாரு. தூங்குனாரு.

ஏன்னா பேச வேண்டிய காலத்தில் பேசல...

பேச நேரமிருந்த காலத்தில் பேச விஷயமில்லை... அனுபவமும் இல்லை

இப்படித்தான் பெரும்பாலான அம்மாக்களோடு வாழ்க்கை முடிஞ்சு போகுது.

நாம என்னைக்காச்சும் வெளியே போகும் போது

அங்க நிறைய அம்மாக்கள பார்ப்பேன்..

அவங்க எல்லார் கண்ணிலும் எனக்கு தெரியுறது காத்திருந்த ஏக்கம் மட்டும் தான்.

உன்னை மாதிரி பசங்க கூட்டிட்டு வர அவங்க மனைவிகளை பார்ப்பேன்...

அதுல இன்னைகே வாழ்ந்துடனும்...

அடுத்த ஆறநாள் இவன் கூட பேசக்கூட முடியாதுன்ற ஒரு வேகம் இருக்கிறத பார்த்தேன்.

இன்னைக்கு ஒரு நாள் தானேன்னு புள்ளைக கேட்ட எல்லாம் செய்ற அப்பாக்கள பார்த்தேன்.

இது கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு காரியம் சாதிக்கிற நாள் ஆகிடுதுனு புரிஞ்சுது...

உங்களுக்கு ஒரு நாள் தானேன்னு ஒரு நினைப்பு வந்துடுச்சு.

இதெல்லாம் ஏன் இப்ப சொல்றேனு யோசிக்றியா...

என் காலத்தில் இதெல்லாம் உங்கப்பாட்ட சொல்லி புரிய வைக்க முடியல..

ஆனா நீ அடுத்த ஜெனரேஷன்.. கொஞ்சம் யோசிப்பில்ல

அதான் உன்கிட்ட சொல்றேன்.

நான் உயிரோடு இருக்கும் போது சொல்ல முடியல...

சொன்னாலும் உன்னால கேட்க முடியாது..

அதனால தான் இப்ப சொல்றேன்.

உனக்கு வீட்ல ஒரு பொண்ணு இருக்கா, மனைவி இருக்கா...

காத்திட்டு இருக்காங்க...

உன் தங்கச்சிக்கு உங்கப்பா மேல இருந்த பாசம் உனக்கு தெரியாது..

ஆனால் அத அவ வெளிக்காட்டும் போது உங்கப்பா கட்டில்ல நகர முடியாம இருந்தாரு.

அவரு தான் அப்பானு அவ காலேஜ்க்கு ஸ்கூலுக்கு தெரியாத அளவுக்கு அவர் பிசி....

அப்பா கூட அங்க போகணும் இங்க போகணும்ங்கிற எந்த ஆசையும் நிறைவேறல..

அவ அப்பா கடைசி காலத்தில சும்மா இருந்தபோது அவர் பேசனது அவ கேட்க முடியல

ஏன்னா அவ வேறு வீட்டுக்கு போய்ட்டா ..

பாத்தியா வாழ்க்கைய ?

நீ உன் பொண்ணுக்கு அப்படி ஒரு வாழ்க்கைய கொடுத்துடாத

உன் மனைவிய அவளோட மகனுக்கு கடிதம் எழுத வச்சிடாத...

இன்னைக்கு மூணுவேளை சாப்பிட சம்பாதிச்சுட்ட.

நாளைக்கு மூணு வேளைக்கும் உனக்கு பிரச்சினை இல்லை.

இன்னும் சொல்லபோனா

நீ இப்ப உழைக்கிறது உன்னோட அடுத்த பத்துவருஷம் கழிச்சி செலவழிக்க போறதுக்குதான்..

அத கொஞ்சம் குறைச்சிக்கோ..

சீக்கிரம் வீட்டுக்கு வா.

பொண்டாட்டிகிட்ட புள்ளைககிட்ட பேசு...

அவங்களுக்கும் நீ நல்லா இருக்கும் போதே கொஞ்சம் நேரம் கொடு....

ஏன்னா அன்புக்காக காத்திட்டு இருக்கிறதும்...

ஒருத்தர காக்க வைக்கிறதும் ஒரு வாழ்க்கையா?

செய்வேனு நம்புறேன்.

ஏன்னா என்கிட்ட நல்லா பேசின பையன் தானே நீ...

உன் மனைவி மகள விட்டுடவா போற...

கடிதத்தை படித்து முடிந்தாள்.

அவள் முகம் ஒருவித பரபரப்பில் இருந்தது.

நிமிர்ந்து அவனை பார்த்தாள்....

இரண்டு மிகப்பெரிய பலூடா ஐஸ்கீரிம் வந்திருந்தது.

அவள் மெதுவாய் தன் அலைபேசியில் இருந்து அவள் அம்மாவிற்கு போன் செய்தாள்.....

நான் தான்மா.....

ஏன் சும்மா பேசக்கூடாதா?....

என்ன செய்ற...

அப்பா என்ன செய்றாரு... என பேசத்தொடங்கினாள்.

ஐஸ்கீரிம் கொஞ்சம் கொஞ்சமாய் உருகத்தொடங்கியது.... .

அவன் சிரித்தபடி சாப்பிட தொடங்கினான்.

இனிமே அப்படித்தான்..

இனி அங்கே அன்புக்காக காத்திருக்க அவசியமில்லை.

படித்ததில் உறைத்தது.

புதன், 22 ஜனவரி, 2020

நிம்மதி இழப்பது எதனால்?.


''நிம்மதி இழப்பது எதனால்?..''

''தன்னிடம் இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம்.

எத்தனை கிடைத்தாலும் மனம் திருப்தி,, நிம்மதி அடைவது இல்லை..

நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுகிறது..

இருப்பதை கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும் போதாது தான்.!

ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம்கூட நிம்மதியே இல்லை...என்ன காரணம் என்பது புரிய வில்லை? என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை.
அங்கே அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.

அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.
குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.

அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.

தன்னுடைய ஒருகையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.

ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக் கண்டு அந்த குழந்தை அழுதது.

இதை கவனித்துக் கொண்டு இருந்த அந்த பணக்காரரிடம் அந்த அறிஞர்,

 "இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா?" என்றார்.

அதே போன்றுதான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை வாரது.நிம்மதி கிடைக்கும் தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்த பணக்காரருக்கு புரிந்து விட்டது.

ஆம்.,நண்பர்களே..

தங்களிடம் உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..

அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

நல்ல எண்ணங்களை மனதில்



‘’ நல்ல எண்ணங்களை மனதில்..’’
..................................

இவ்வுலகில் வாழும் நாம் எல்லோரும் மகிழ்வுடனும், ஆனந்தமாகவும் வாழ விரும்புகிறோம். அதற்கு நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும்..

நமது அறுவடை நாம் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

ஆரோக்கிய எண்ணங்கள் தான் சமுதாயத்தில், அளப்பரிய செயல்களின் மூலம், தடம் பதிக்க உதவும் மாபெரும் சக்தியாக இருக்கிறது.

ஆரோக்கிய எண்ணங்களை கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியை தழுவியதில்லை.

உயர்ந்த எண்ணங்களை கொண்டு தங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் செலுத்த முற்படுபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை வண்ணமயமான வெற்றிகளை அள்ளித்தரும்.

ஓருநாள் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன்,

''உடல் வலிமை யோடு இருக்கிற நீர் ஏன் உழைக்கக் கூடாது?நான் வயலில் உழுகிறேன்; விதைக்கிறேன்; கடுமையாக உழைத்து எனக்குத் தேவையான உணவைப் பெறுகிறேன்.

என்னைப் போல நீயும் உழைத்தால் இப்படிப் பிச்சை எடுக்கும் இழி நிலை வேண்டாமே!என்னைப் போல கொளவரத்துடன் உண்ணலாமே? என்று கேட்டான்.

அதற்கு புத்தர் , நானும் உழுது விதைத்துத்தான் உண்கிறேன் என்றார்.

அந்த விவசாயி வியப்புடன், நீர் உழவரா? அதற்கான அடையாளம் உம்மிடம் கொஞ்சம்கூட இல்லையே!? என்று கேட்டான்.

உடனே புத்தர், அன்பனே! கவனமாகக் கேள்.

நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறேன்.
என் நல்ல செயல்களை அந்த விதைக்கு மழைநீராகப் பாய்ச்சுகிறேன்.

விவேகமும் வைராக்கியமும் என் கலப்பையின் உறுப்புக்கள்.என் உள்ளமே மாடுகளை வழிநடத்தும் கடிவாளம்.

தருமமே கலப்பையின் கைப்பிடி. தியானமே முள்.மன அமைதியும், புலனடக்கமுமே எருதுகள்.

நான் மனம் என்னும் வயலை உழுது, ஐயம், மயக்கம், அச்சம், பிறப்பு, இறப்பு ஆகிய களைகளை எடுத்துஎறிகிறேன்.

அறுவடை செய்து கிடைக்கும் கனி - நிர்வாணம் என்னும் பிறப்பு இறப்பு இல்லாத நிலையாகும்.

இப்படி நான் அறுவடை செய்வதால் எல்லாத் துன்பங்களும் அழிந்து விடுகின்றன என்று விளக்கம் தந்தார்..

ஆம்..,நண்பர்களே.

ஒரே முறை வாழப் போகிறோம்,எதை விதைக்கிறோமோ அதைத்தான் பலநூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம்..

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம்
அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம்..
பிறரை வாழ வைத்து வாழ்வோம்...

வெள்ளி, 17 ஜனவரி, 2020

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?


புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!