புதன், 22 ஜனவரி, 2020

நிம்மதி இழப்பது எதனால்?.


''நிம்மதி இழப்பது எதனால்?..''

''தன்னிடம் இருப்பதே போதும்'' என்ற எண்ணம் வராதவரை, நாம் தொடர்ந்து ஏதோ ஒன்றிற்காக அலைந்து கொண்டேதான் இருக்கின்றோம்.

எத்தனை கிடைத்தாலும் மனம் திருப்தி,, நிம்மதி அடைவது இல்லை..

நம்மிடம் இருப்பதை வைத்து சரியான முறையில் பயன்படுத்த தவறும்போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படுகிறது..

இருப்பதை கொண்டு திருப்தி காணும் உள்ளம் இல்லையெனில் கோடி கோடியாக கொட்டினாலும் போதாது தான்.!

ஒரு அறிஞரிடம் பணக்காரர் வந்து,'' அய்யா என்னிடம் நிறைய செல்வமிருந்தும் மனதில் கொஞ்சம்கூட நிம்மதியே இல்லை...என்ன காரணம் என்பது புரிய வில்லை? என்று கேட்டார்.

அதற்கு அந்த அறிஞர் பதில் சொல்லவில்லை.
அங்கே அருகில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை ஒன்றை அருகே அழைத்தார்.

அதன் கையில் ஒரு மாம்பழத்தை கொடுத்தார்.
குழந்தை அதை தன்னுடைய ஒரு கையால் வாங்கிக் கொண்டது.

அடுத்து ஒரு பழத்தை கொடுத்தார்.அதையும் இன்னொரு கையால் வாங்கிக் கொண்டது.மீண்டும் ஒரு பழத்தை கொடுத்தார்.

தன்னுடைய ஒருகையால் இரு பழங்களையும் மார்போடு அணைத்துக் கொண்டு மூன்றாவது பழத்தையும் பெற முயற்சித்தது.

ஆனால் ஒரு பழம் நழுவி கிழே விழுந்தது.அதைக் கண்டு அந்த குழந்தை அழுதது.

இதை கவனித்துக் கொண்டு இருந்த அந்த பணக்காரரிடம் அந்த அறிஞர்,

 "இந்த குழந்தையை பார்த்தாயா? இரண்டு பழம் போதும் என்று நினைத்திருந்தால் இந்த நிலை அந்தக் குழந்தைக்கு வந்திருக்குமா?" என்றார்.

அதே போன்றுதான் "போதும்" என்ற திருப்தி ஏற்பட்டு விட்டால் பிரச்னை வாரது.நிம்மதி கிடைக்கும் தனக்கு ஏன் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்ற விவரம் இப்போது அந்த பணக்காரருக்கு புரிந்து விட்டது.

ஆம்.,நண்பர்களே..

தங்களிடம் உள்ளதை வைத்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள்..

அது, வாழ்க்கையில் மன நிம்மதியையும், அமைதியையும் ஏற்படுத்தும்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

நல்ல எண்ணங்களை மனதில்



‘’ நல்ல எண்ணங்களை மனதில்..’’
..................................

இவ்வுலகில் வாழும் நாம் எல்லோரும் மகிழ்வுடனும், ஆனந்தமாகவும் வாழ விரும்புகிறோம். அதற்கு நல்ல எண்ணங்களை மனதில் விதைக்க வேண்டும்..

நமது அறுவடை நாம் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

ஆரோக்கிய எண்ணங்கள் தான் சமுதாயத்தில், அளப்பரிய செயல்களின் மூலம், தடம் பதிக்க உதவும் மாபெரும் சக்தியாக இருக்கிறது.

ஆரோக்கிய எண்ணங்களை கொண்டவர்கள் என்றுமே வாழ்க்கையில் தோல்வியை தழுவியதில்லை.

உயர்ந்த எண்ணங்களை கொண்டு தங்களது வாழ்க்கையை வெற்றிப் பாதையில் செலுத்த முற்படுபவர்களுக்கு என்றுமே வாழ்க்கை வண்ணமயமான வெற்றிகளை அள்ளித்தரும்.

ஓருநாள் புத்தர் பிச்சையேற்க ஒரு வீட்டின் முன் போய் நின்றார். அவரைக் கண்ட விவசாயியான அந்த வீட்டுக்காரன் கோபத்துடன்,

''உடல் வலிமை யோடு இருக்கிற நீர் ஏன் உழைக்கக் கூடாது?நான் வயலில் உழுகிறேன்; விதைக்கிறேன்; கடுமையாக உழைத்து எனக்குத் தேவையான உணவைப் பெறுகிறேன்.

என்னைப் போல நீயும் உழைத்தால் இப்படிப் பிச்சை எடுக்கும் இழி நிலை வேண்டாமே!என்னைப் போல கொளவரத்துடன் உண்ணலாமே? என்று கேட்டான்.

அதற்கு புத்தர் , நானும் உழுது விதைத்துத்தான் உண்கிறேன் என்றார்.

அந்த விவசாயி வியப்புடன், நீர் உழவரா? அதற்கான அடையாளம் உம்மிடம் கொஞ்சம்கூட இல்லையே!? என்று கேட்டான்.

உடனே புத்தர், அன்பனே! கவனமாகக் கேள்.

நம்பிக்கை என்னும் விதையை விதைக்கிறேன்.
என் நல்ல செயல்களை அந்த விதைக்கு மழைநீராகப் பாய்ச்சுகிறேன்.

விவேகமும் வைராக்கியமும் என் கலப்பையின் உறுப்புக்கள்.என் உள்ளமே மாடுகளை வழிநடத்தும் கடிவாளம்.

தருமமே கலப்பையின் கைப்பிடி. தியானமே முள்.மன அமைதியும், புலனடக்கமுமே எருதுகள்.

நான் மனம் என்னும் வயலை உழுது, ஐயம், மயக்கம், அச்சம், பிறப்பு, இறப்பு ஆகிய களைகளை எடுத்துஎறிகிறேன்.

அறுவடை செய்து கிடைக்கும் கனி - நிர்வாணம் என்னும் பிறப்பு இறப்பு இல்லாத நிலையாகும்.

இப்படி நான் அறுவடை செய்வதால் எல்லாத் துன்பங்களும் அழிந்து விடுகின்றன என்று விளக்கம் தந்தார்..

ஆம்..,நண்பர்களே.

ஒரே முறை வாழப் போகிறோம்,எதை விதைக்கிறோமோ அதைத்தான் பலநூறு மடங்காக அறுவடை செய்யப் போகிறோம்..

நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம்
அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம்..
பிறரை வாழ வைத்து வாழ்வோம்...

வெள்ளி, 17 ஜனவரி, 2020

புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?


புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது?

புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.

மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே! நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது. ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்?”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.

மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.
அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.

அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா?”

புத்தர் சொல்கிறார்: “தாராளமாக. அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான். ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை. உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும். இடம் பொருட்டே அல்ல”

புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.

புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... ஓடுகாலி என்றிருக்கும்.
சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை. ஒற்றைக் குழந்தை ராகுலன். விடுமா ஆண்வர்க்கம்.?

சாதாரணமாய் இருந்தாலே விடாது. உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.?புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள். தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள். ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.

எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.
எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.

எது கடினம் .? சொல்லுங்கள் யார் துறவி இப்போது.!!!