வியாழன், 24 நவம்பர், 2016

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்... !!!

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார்.

உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன்.

மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.

சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்

"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார்.

இல்லை என பதில் சொன்னார்.

" அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா......???" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார்.

இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.

"யாருக்கும் பயனில்லாத,
நல்ல விஷயமுமில்லாத,
நேரடியாக நீங்கள் பார்க்காத,
என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.

நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.

நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.

நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.

பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.....!!!

உலகில் சிறு தவறு கூட செய்யாதவர்களே இல்லை.

மேலு‌ம் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ஏதுமில்லை........!!!

எனவே,

வார்த்தைகளால் யாரையும் பழிக்காதீர்கள்......!!!

வசவுகளால் இதயங்களை கிழிக்காதீர்கள்.......!!!

நல்லுறவை வன்முறையால் இழக்காதீர்கள்.......!!!

நட்புறவை இழிமொழியால் துளைக்காதீர்கள்.......!!!

மனிதர்கள் ரத்தமும், சதையும், உணர்ச்சிகளாலும் உருவாக்கப்பட்டவர்கள்.

*நீங்கள் யாரையும் இழந்து விடாதீர்கள்*.... 

புகை நமக்கு பகை ...


மனதை கலங்க வைத்த கதை

மகேஷ் அங்க பாரேன் முழு நிலா எவ்வளவு அழகா இருக்கு என்று மகேஷ் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டை பிடுங்கி எறிந்தவாறே கூறினாள் மகா...

"என் இந்த நிலாவ விடவா அந்த நிலா அழகு "என்று சொல்லிக்கொண்டே மகாவை கட்டியணைத்தான் மகேஷ்!

" விடு மகேஷ்... வயித்துல இருக்க உன் பிள்ளை உதைக்குறான் "

" ஏய் லூசு அவன் உதைக்கல டி... என் அப்பனுக்கு அம்மா மேல எவ்ளோ லவ் பாருனு சந்தோசத்துல துள்ளி குதிக்குறான் "என்று சொல்லிக்கொண்டே மகாவை மேலும் இருக்கமாய் அணைத்துக் கொண்டான் மகேஷ்!

மகேசும் மகாவும் காதலிச்சு பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க...
அவங்க காதலோட சாட்சியா இப்போ மகா வயித்துல ஆறு மாத கரு...

மகேஷ் ஒரு பன்னாட்டு நிறுவனத்துல உயர் பதவியில இருக்கின்றான்!  கை நிறைய சம்பளம்!

****************************************************************/********************

மறுநாள் நீண்ட நேரமாகியும் மகேஷ் படுக்கையை விட்டு எழுந்திருக்காததால் மகா எழுப்பினால்...

"மகேஷ் எழுந்திருங்க டைம் ஆச்சி ஆபிஸ்க்கு போகலையா "

மகேஷ் எழுந்து...

" மகா என்னனு தெரியல தொண்டை ரொம்ப வலியாயிருக்கு... பேசக் கூட கஷ்டமா இருக்கு மகா... "திக்கி திணறி வலியோடு சொல்லி முடித்தான் மகேஷ்!

" அய்யோ என்னாச்சி மகேஷ்... கிளம்புங்க நாம டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம் "

" நான் ஜெய்க்கு போன் பண்ணி வர சொல்லி அவன்கூட போய்ட்டு வர்றேன் மகா... நீ எதுக்கு கஷ்டப்பட்டுகிட்டு "

" சரி மகேஷ் "

************, ******************************************************

" சொல்லுங்க மகேஷ் எத்தனை நாளா வலியிருக்கு "

" நைட்ல இருந்துதான் டாக்டர் "

" ஓகே... நான் ரெண்டு நாளைக்கு மெடிசின் தர்றேன் சாப்பிடுங்க... சரியாகலனா ரெண்டு நாள் கழிச்சி வாங்க "

" ஓகே டாக்டர் "
மகேஷ் டாக்டர் எழுதிக் கொடுத்த மருத்துவ சீட்டை பெற்றுக்கொண்டு வெளியேறினான்!

*****************, ******************************************************

இரண்டு நாட்களாகியும் வலி குறையாததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றான் மகேஷ்!

" டாக்டர் இன்னும் வலி குறையல டாக்டர் "

" மகேஷ் உங்களுக்கு புகை பிடிக்குற பழக்கம் இருக்கா.... ஐ மீன் ஸ்மோக்கிங் ஹேபிட் "

" ஏ... ஏன் கேக்குறிங்க டாக்டர் "
மேசை பயம் தொற்றிக்கொண்டது!

" பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக கேக்குறேன் "

" ம்ம்ம்... இருக்கு டாக்டர் "

" ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீங்க "

" மினிமம் இரண்டு பாக்கெட் "

" ஓகே பைன்.... பயப்படாதீங்க ஒரு சந்தேகத்துக்காக நாம ஒரு டெஸ்ட் எடுத்து பார்த்துடுவோம்... "

" என்ன டெஸ்ட் டாக்டர் "

" கேன்சர் டெஸ்ட்... இது ஒரு சந்தேகத்துக்காகதான்... நீங்க லேப்ல சேம்பல் கொடுத்துட்டு போங்க... ரிசல்ட் வர ஏழு நாளாகும்... நீங்க நெக்ஸ்ட் வீக் வாங்க "

" டாக்டர் எனக்கு கேன்சர்னு சொல்றீங்களா??? "

" ஹலோ மகேஷ் இது ஜஸ்ட் ஒரு கிளாரிபிகேஷன் அவ்வளவுதான்... நீங்க பயப்படாம போய்ட்டு வாங்க... "

************************************************************************************

இந்த ஏழு நாட்கள் மகேஷிற்கு நரகமாய் நகர்ந்தது...

மகா அவனை நெருங்கி வந்தாலும் இவன் விலகி செல்ல நிறைய மனக்கசப்புகள் இருவருக்குள்ளும்!

மகேஷ் மனதில் பயத்தை சுமந்து கொண்டு மருத்துவமனை சென்றான்!

"வாங்க மகேஷ்... "

" டாக்டர் ரிசல்ட் வந்துடுச்சா "

" ம்ம்ம்.... மகேஷ் உங்களுக்கு கல்யாணமாகிடுச்சா??? "

டாக்டர் கேட்ட கேள்வி மகேசின் பயத்தை மேலும் கூட்டியது!

" ம்ம்ம்...."என்று தலையாட்டினான் மகேஷ்!

"சாரி மகேஷ் உங்களுக்கு கேன்சர்னு ரிப்போர்ட் வந்திருக்கு "

மகேசும் மனதிற்குள் அவ்வார்த்தை பேரிடியாய் இறங்கியது!

" ஐய்யோ டாக்டர் என்ன சொல்றீங்க.... டாக்டர் நான் இப்போதான் வாழ்க்கைய வாழ ஆரம்பிச்சிருக்கேன் இதுக்குள்ள அது முடிஞ்சி போச்சினு சொன்னா எப்படி டாக்டர்.... என் குழந்தை... என் குழந்தை முகத்த கூட நான் இன்னும் பார்க்கல... அய்யோ மகாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்.... டாக்டர் இது சரி பண்ண முடியாதா?  ஏதாச்சும் வழி இருக்கா டாக்டர்... நான் வாழனும் டாக்டர்... என் மகா கூட நான் வாழணும் "என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதான் மகேஷ்!

" மகேஷ் நோய் வரதுக்கு முன்னாடி நாம இதெல்லாம் யோசிக்கறதில்லை... கேன்சரை குணப்படுத்த முடியாது... மரணத்தை வேணும்னா கொஞ்ச காலம் தள்ளிப்போடலாம்...அதுவும் வலியோட"

" ஐய்யோ டாக்டர் நான் வாழனும் டாக்டர் "

" மகேஷ் உங்க வாழ்க்கை யாரால போச்சினு இப்போ தெரியுதா "

" என் அற்ப சுகத்துக்காக சிகரெட் பிடிச்சி என் வாழ்க்கையோட சேர்த்து மகா வாழ்க்கையையும் அழிச்சது சிகரெட்தான் டாக்டர் "

" சிகரெட் பிடிக்காதீங்கனு எத்தனையோ வழிமுறைல நம்ம அரசாங்கம் சொல்லுது எவன் கேக்குறிங்க.... நோய் வந்ததுக்கப்புறம் தெரிஞ்சிருந்தா நான் தொட்டிருக்க மாட்டேன்னு அழறீங்க...

இப்போ நான் சொல்றேன் நீங்க இந்த பழக்கத்த விட்டுட்டு போய் குடும்பத்தோட சந்தோசமா வாழுங்க..."

"டாக்டர் என்ன சொல்றீங்க "

" யெஸ் உங்களுக்கு கேன்சர் இல்ல... ட்ரோட் இன்பெக்சன் ஆகியிருக்கு... இது தொடர்ந்தா கேன்சர் வர வாய்ப்பிருக்கு... இதை நான் முதலே சொல்லியிருந்தா நீங்க ஆஸ்பிடட்டல்ல இருந்து வெளிய போனதும் இந்த ஏழுநாள் டென்சனை போக்க சிகரெட்ட பத்த வெச்சிருப்பீங்க... இப்போ சொல்லுங்க சிகரெட் பிடிப்பீங்களா? "

" அய்யோ டாக்டர் இனிமே மனசால கூட அந்த சனியனை நினைக்க மாட்டேன்... இது கடவுள் எனக்கு கொடுத்த இன்னொரு வாழ்க்கை "
என்று கண்களில் கண்ணீரோடு டாக்டரை கையெடுத்து கும்பிட்டான் மகேஷ்!

*****************, ************** *****************************//****
உதட்டோடு உறவாடி

உயிரை பறிக்கும்...

ஆறாவது விரல்

சிகரெட்!

வெளியேறுவது புகை மட்டுமல்ல உங்கள் புன்னகையும்தான்!

திங்கள், 21 நவம்பர், 2016

கனிவான சொல் வெற்றியை தரும்.

கனிவான சொல் வெற்றியை தரும்.

☛ ஒரு ஊரில் ஜமீன்தாரர் ஒருவர் சக்தி மிக்க காளை மாடு ஒன்றை வைத்திருந்தார். அந்த காளை மாடு 10 வண்டிகளை ஒரே நேரத்தில் இழுக்கும் சக்தி கொண்டது. அந்த காளை மாட்டைப் பார்த்து அவ்வு+ர் மக்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். ஜமீன்தாரர், அந்த ஊர் மக்களிடம் தன் காளை மாட்டை விட சிறந்த காளை மாடு இந்த ஊரில் யாரிடமாவது இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த ஊரில் வசிக்கும் ஒரு விவசாயி தன்னிடம் இருக்கிறது என்று கூறினார்.

☛ அதற்கு ஜமீன்தார் அவரிடம், என்ன என்னுடைய காளை மாட்டை விட சிறந்த காளை மாடு உன்னிடம் இருக்கிறதா? என்று கேட்டார். ஆமாம், என்னிடம் இருக்கிறது என்றார். மேலும் உங்களுடைய காளை 10 வண்டிகளைத்தான் ஒரே நேரத்தில் இழுக்கும். ஆனால் என்னுடைய காளை 20 வண்டிகளை ஒரே நேரத்தில் இழுக்கும் என்றார்.

☛ விவசாயி கூறியதைக் கேட்ட ஜமீன்தாரரால் நம்ப முடியவில்லை. ஜமீன்தாரர் அவரிடம், நீ சொல்வதைப் போல் உன் காளை ஒரே நேரத்தில் 20 வண்டிகளை இழுத்துவிட்டால் நான் உனக்கு 200 பொற்காசுகள் தருகிறேன் என்று பந்தயம் கட்டினார். அதற்கு அந்த விவசாயி போட்டியை வைத்துக் கொள்ளலாம். நிச்சயம் 200 பொற்காசுளும் எனக்குத் தான் கிடைக்கப் போகின்றது என்று கூறிவிட்டு சென்றார்.

☛ அடுத்த நாள் போட்டி தொடங்கியது. 20 வண்டிகளுடன் விவசாயியின் காளை பு+ட்டப்பட்டது. விவசாயியின் காளை மாடு சிறிதும் அசையாமல் அப்படியே நின்றது. அது கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை. அந்த விவசாயி அந்த காளைமாட்டை இழு, இழு, இல்லை என்றால் சவுக்கடி விழும் என்று காளைமாட்டை மிரட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுதும் அந்த காளை மாடு கொஞ்சம் கூட நகரவில்லை. இறுதியில் விவசாயி தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். போட்டியில் ஜமீன்தார் வெற்றி பெற்றார்.

☛ சில நாட்கள் கழித்து மீண்டும் போட்டி நடத்த ஜமீன்தாரரை அழைத்தார் விவசாயி. மேலும் ஜமீன்தாரரிடம் இந்த முறை போட்டியில் நான் தோல்வியடைந்தால் நான் என் நிலங்களைத் தருகிறேன் என்று பந்தயம் கட்டினார். ஜமீன்தாரரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டார். போட்டி தொடங்கியது. அந்த விவசாயி தன்னுடைய காளைமாட்டின் அருகே வந்து அதை தடவிக் கொடுத்து அன்பாக பேசினார். நண்பா! உன்னால் இது முடியும். எங்கே முயற்சி செய் பார்க்கலாம் என்றார்.

☛ அந்த விவசாயியின் அன்பான வார்த்தைகளை புரிந்து கொண்ட அந்தக் காளை தனது பலத்தைத் திரட்டிக் கொண்டு வண்டிகளை இழுத்தது. அந்த விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கும், ஜமீன்தாரருக்கும் ஒரே ஆச்சரியம். அட, இந்த காளை ஒரே நேரத்தில் 20 வண்டிகளையும் இழுத்து விட்டதே! இந்த காளை தான் சக்தி மிகுந்த காளை என்று கூறி பாராட்டினர்.

☛ ஜமீன்தாரர் மிகவும் ஆச்சர்யப்பட்டு அந்த விவசாயியிடம், அன்று உன் காளையால் வண்டிகளை இழுக்க முடியவில்லை. ஆனால் இன்று இழுத்து விட்டதே. நீ அதற்கு என்ன பயிற்சி கொடுத்தாய் என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, நான் என் காளை மாட்டிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டேன். நான் செலுத்திய உண்மையான அன்பின் காரணமாக என் காளை மாடு தன் முழு சக்தியை ஒன்று திரட்டி வண்டிகளை இழுத்து என்னை வெற்றியடையச் செய்தது என்றார்.

நீதி : கனிவான சொல் வெற்றியை தரும்.

செவ்வாய், 8 நவம்பர், 2016

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் ?

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் ? சிரிக்க சிந்திக்க

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

வெள்ளி, 4 நவம்பர், 2016

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும்

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் ...

அது ஒரு வானம் வஞ்சம் தீர்த்த வறண்ட கிராமம்...

பல குடும்பங்கள் ஊரை காலிசெய்துவிட்டு நகரத்தார் வாகனங்களுக்கு ரோடு போட சாலையோரமாய் குடிபெயர்ந்துவிட்டார்கள்!
ஊரை விட்டு பிரிய மனமில்லாமல் ஊரோடு ஒட்டிக்கொண்ட ஒரு சில குடும்பங்களில் ராமசாமியின் குடும்பமும் ஒன்று!
)
ராமசாமிக்கு மூன்று பிள்ளைகள்! இது தவிர ஒரு ஒரு தாய் ஆடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளும் இருக்கின்றன, அதோடு நான்கு முருங்கை மரங்களும் இருக்கின்றன! ஆடும் குட்டிகளும் வருடாந்திர செலவுகளுக்கும், முருங்கை மரங்கள் வாராந்திர செலவுகளுக்கும் உதவுகின்றன! சீசன் வரும்போது ஐந்து கிலோ பத்து கிலோ என்று காய்க்கின்ற முருங்கைகள் மற்ற நாட்களில் ஒரு கிலோ இரண்டு கிலோவோடு நிறுத்திக்கொள்ளும்!

எவ்வளவு வந்தாலும் பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டால் ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை நடந்து சென்றே ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது ராமசாமியின் வழக்கம்! முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை )கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை, ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்! காரணம் ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்செல்ல, சிறிது நேரத்தில் பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க, அவருக்காக மளிகைக்காரர் எடைபோட அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது!

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே,

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே, அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்! நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்! கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார்! அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது, வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்! இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா, கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போன ராமசாமி, அய்யா மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்ல, ஒவ்வொரு முறையும்
-------------------------------------------------------
நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி
-------------------------------------------------------
தான் எடைபோட்டு கொண்டுவருவேன் இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,

மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது!
தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும் அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலகநியதி!
                நீதி
நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் நல்லதை தந்தால் நல்லது வரும், தீமையை தந்தால் தீமை வரும்!* *வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம், ஆனால் நிச்சயம் வரும்!*
ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்...