கனிவான சொல் வெற்றியை தரும்.
☛ ஒரு ஊரில் ஜமீன்தாரர் ஒருவர் சக்தி மிக்க காளை மாடு ஒன்றை வைத்திருந்தார். அந்த காளை மாடு 10 வண்டிகளை ஒரே நேரத்தில் இழுக்கும் சக்தி கொண்டது. அந்த காளை மாட்டைப் பார்த்து அவ்வு+ர் மக்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டனர். ஜமீன்தாரர், அந்த ஊர் மக்களிடம் தன் காளை மாட்டை விட சிறந்த காளை மாடு இந்த ஊரில் யாரிடமாவது இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கு அந்த ஊரில் வசிக்கும் ஒரு விவசாயி தன்னிடம் இருக்கிறது என்று கூறினார்.
☛ அதற்கு ஜமீன்தார் அவரிடம், என்ன என்னுடைய காளை மாட்டை விட சிறந்த காளை மாடு உன்னிடம் இருக்கிறதா? என்று கேட்டார். ஆமாம், என்னிடம் இருக்கிறது என்றார். மேலும் உங்களுடைய காளை 10 வண்டிகளைத்தான் ஒரே நேரத்தில் இழுக்கும். ஆனால் என்னுடைய காளை 20 வண்டிகளை ஒரே நேரத்தில் இழுக்கும் என்றார்.
☛ விவசாயி கூறியதைக் கேட்ட ஜமீன்தாரரால் நம்ப முடியவில்லை. ஜமீன்தாரர் அவரிடம், நீ சொல்வதைப் போல் உன் காளை ஒரே நேரத்தில் 20 வண்டிகளை இழுத்துவிட்டால் நான் உனக்கு 200 பொற்காசுகள் தருகிறேன் என்று பந்தயம் கட்டினார். அதற்கு அந்த விவசாயி போட்டியை வைத்துக் கொள்ளலாம். நிச்சயம் 200 பொற்காசுளும் எனக்குத் தான் கிடைக்கப் போகின்றது என்று கூறிவிட்டு சென்றார்.
☛ அடுத்த நாள் போட்டி தொடங்கியது. 20 வண்டிகளுடன் விவசாயியின் காளை பு+ட்டப்பட்டது. விவசாயியின் காளை மாடு சிறிதும் அசையாமல் அப்படியே நின்றது. அது கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை. அந்த விவசாயி அந்த காளைமாட்டை இழு, இழு, இல்லை என்றால் சவுக்கடி விழும் என்று காளைமாட்டை மிரட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுதும் அந்த காளை மாடு கொஞ்சம் கூட நகரவில்லை. இறுதியில் விவசாயி தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். போட்டியில் ஜமீன்தார் வெற்றி பெற்றார்.
☛ சில நாட்கள் கழித்து மீண்டும் போட்டி நடத்த ஜமீன்தாரரை அழைத்தார் விவசாயி. மேலும் ஜமீன்தாரரிடம் இந்த முறை போட்டியில் நான் தோல்வியடைந்தால் நான் என் நிலங்களைத் தருகிறேன் என்று பந்தயம் கட்டினார். ஜமீன்தாரரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டார். போட்டி தொடங்கியது. அந்த விவசாயி தன்னுடைய காளைமாட்டின் அருகே வந்து அதை தடவிக் கொடுத்து அன்பாக பேசினார். நண்பா! உன்னால் இது முடியும். எங்கே முயற்சி செய் பார்க்கலாம் என்றார்.
☛ அந்த விவசாயியின் அன்பான வார்த்தைகளை புரிந்து கொண்ட அந்தக் காளை தனது பலத்தைத் திரட்டிக் கொண்டு வண்டிகளை இழுத்தது. அந்த விவசாயிக்கு ஒரே மகிழ்ச்சி. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களுக்கும், ஜமீன்தாரருக்கும் ஒரே ஆச்சரியம். அட, இந்த காளை ஒரே நேரத்தில் 20 வண்டிகளையும் இழுத்து விட்டதே! இந்த காளை தான் சக்தி மிகுந்த காளை என்று கூறி பாராட்டினர்.
☛ ஜமீன்தாரர் மிகவும் ஆச்சர்யப்பட்டு அந்த விவசாயியிடம், அன்று உன் காளையால் வண்டிகளை இழுக்க முடியவில்லை. ஆனால் இன்று இழுத்து விட்டதே. நீ அதற்கு என்ன பயிற்சி கொடுத்தாய் என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி, நான் என் காளை மாட்டிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டேன். நான் செலுத்திய உண்மையான அன்பின் காரணமாக என் காளை மாடு தன் முழு சக்தியை ஒன்று திரட்டி வண்டிகளை இழுத்து என்னை வெற்றியடையச் செய்தது என்றார்.
நீதி : கனிவான சொல் வெற்றியை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக